டான் சீ லெங்: நிறுவனங்கள் கூடுதல் சிங்கப்பூரர்களை வேலைக்கு எடுக்கலாம்

டான் சீ லெங்: நிறுவனங்கள் கூடுதல் சிங்கப்பூரர்களை வேலைக்கு எடுக்கலாம்

2 mins read
7384bc18-a271-48c0-b9ea-0dcce7246d8a
சம்பளத்தை 3% முதலாளிகள் அடுத்த ஆண்டு குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இவ்வாண்டு 29% நிறுவனங்கள் சம்பளக் குறைப்பு செய்திருந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் பொருளியல் மீண்டு வருவதைத் தொடர்ந்து நிறுவனங்கள் கூடுதல் சிங்கப்பூரர்களை வேலைக்கு எடுக்கலாம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

மனிதவளப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நிறுவனங்கள் வரும் மாதங்களில் வேலை தேடிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடவுள்ள சுமார் 15,000 சிங்கப்பூரர்களிலிருந்து புதிய ஊழியர்களை நியமிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

சென்ற மாத நிலவரப்படி, குறுகிய காலத்துக்கான கொவிட்-19 தொடர்பிலான பணிகளில் ஈடுபட்ட 5,200 ஊழியர்கள் வேறு வேலையைத் தேடும் முயற்சியில் இறங்குவர் என்று டாக்டர் டான் தெரிவித்தார். பாதுகாப்பு தூர இடைவெளித் தூதர்கள், தடுப்பூசி நிலையங்களில் பணியாற்றியவர்கள் உள்ளிட்டோர் அவர்களில் அடங்குவர்.

சிங்கப்பூர் ஊழியரணி, தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகம் ஆகிய அமைப்புகள் அத்தகையோர் வேலை தேடிக்கொள்ள ஆதரவு வழங்கி வருகின்றன. அவர்களில் பலர் உணவு, பான மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளிலிருந்து வந்தவர்கள் என்று டாக்டர் டான் சொன்னார்.

கடந்த பிப்ரவரி மாத கடைசி நிலவரப்படி எஸ்ஜி யுனைடெட் வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத் திட்டத்தின்கீழ் 9,800 பேர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்களைத் தகுந்த வேலைகளில் அமர்த்த டாக்டர் டான் தலைமையில் உள்ள வேலை செயற்குழு பல்வேறு துறைகளில் உள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

குறுகிய காலத்துக்கான கொவிட்-19 தொடர்பிலான வேலைகளில் இருந்த மேலும் 1,200 ஊழியர்கள் நீண்ட காலத்துக்கான வேலைகளில் அமர்த்தப்படுவர் என்று டாக்டர் டான் தெரிவித்தார்.

வேலை தொடர்பில் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.