கொவிட்-19 ஆதரவுத் திட்டங்களைச் செயல்படுத்தும் பணியில் போதிய மனிதவளமும் இதர வளங்களும் பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு வலியுறுத்தி இருக்கிறது.
நிதிச் சவால்களைச் சமாளிக்கவும் செலவினங்கள் எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்கும் வகையில் இருப்பதற்காக பொருத்தமில்லாத் திட்டங்களை நிறுத்தவும் ஏதுவாக ஆதரவுத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவினங்களை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட எட்டு எம்.பி.க்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழு 93 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மேற்கண்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி எம்.பி. ஆங் வெய் நெங் தலைமையிலான அக்குழுவில் மக்கள் செயல் கட்சி எம்.பி.க்கள் எழுவரும் செங்காங் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி எம்.பி. டாக்டர் ஜேமஸ் லிம்மும் இடம்பெற்றுள்ளனர்.
சுகாதாரப் பராமரிப்பிற்கான நிதிச் சுமையை நிர்வகிப்பது தொடர்பான முயற்சிகளை வழிநடத்தும் விதமாக ஒரு வழிநடத்து அமைச்சை நியமிக்கவும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தனது அறிக்கையைத் தயாரிக்க, 2020, 2021 ஆண்டுகளின் வருடாந்திர வரவுசெலவுத் திட்ட அறிக்கைகளையும் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வரவுசெலவுத் திட்ட அறிக்கைகளையும் அக்குழு கருத்தில்கொண்டது.
சுகாதாரம், முதுமைக்காலப் பராமரிப்பிற்காகச் செலவுகள் தொடர்ந்து உயரும் எனக் குறிப்பிட்ட குழு, அதைச் சமாளிக்க ஏதுவாக, சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
தேசிய அளவிலான சுகாதாரத் திட்டங்களில் சிங்கப்பூரர்கள் பங்கெடுக்கும் விதமாக, ஓர் ஆதரவான வேலைச் சூழலைப் பொது, தனியார் துறை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அக்குழு ஆலோசனை கூறி இருக்கிறது.