ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமி பரவலாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளதால், ஓமிக்ரான் துணைத் திரிபுகள் உருவெடுக்கவும் அது வித்திட்டுள்ளது.
அந்த வகையில், சிங்கப்பூரில் பிஏ.4, பிஏ.5 ஓமிக்ரான் துணைத் திரிபுகள் சிங்கப்பூரில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.
எனினும், இதுகுறித்து மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பிஏ.4, பிஏ.5 துணைத் திரிபுகள் குறித்து இதுவரை தெரியவந்துள்ள விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவரிக்கிறது.
ஓமிக்ரான் துணைத் திரிபுகளில் ஏன் இத்தனை வகை உள்ளன?
ஓமிக்ரான் வேகமாகப் பரவி உள்ளது. எனவே, அதன் தன்மை தொடர்ந்து உருமாற அதற்குப் பல சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பிஏ.1, பிஏ.2, பிஏ.3, பிஏ.4, பிஏ.5 உள்ளிட்டவை இத்தகைய துணைத் திரிபுகளில் அடங்கும்.
பிஏ.4, பிஏ.5 துணைத் திரிபுகள் வேறு எங்கெல்லாம் கண்டறியப்பட்டுள்ளன?
இவை 12க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவில் இவை அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் பிஏ.4, பிஏ.5 துணைத் திரிபுகளால் இதுவரை எத்தனை பேருக்குப் பாதிப்பு?
சுகாதார அமைச்சு நடத்திய கண்காணிப்புப் பரிசோதனையில், இருவருக்கு பிஏ.4 திரிபும் ஒருவருக்கு பிஏ.5 திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமைச்சு தெரிவித்தது.
அந்த மூவரிடமும் அறிகுறிகள் தென்படவில்லை அல்லது லேசான அறிகுறிகளே தென்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர்கள், கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியையும் போட்டுக்கொண்டவர்களாவர்.
சிங்கப்பூரில் பிஏ.4, பிஏ.5 பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அமைச்சு கூறியது.
நாம் கவலைப்பட வேண்டுமா?
பிஏ.1 அல்லது இதர துணைத் திரிபுகளால் தொற்றுக்கு ஆளானவர்களை மீண்டும் தொற்றுவதில் பிஏ.4, பிஏ.5 துணைத் திரிபுகளுக்கு ஆற்றல் இருப்பதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன.
இத்தகைய துணைத் திரிபுகள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தொற்றக்கூடும் என்ற கவலையும் உள்ளது.
என்றாலும், இந்தத் துணைத் திரிபுகள் கண்டறியப்படுவது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதேபோல, புதுப்புது துணைத் திரிபுகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு, அவை ஒரு கட்டத்தில் புது தொற்று அலைகளுக்கு வித்திடும்.
ஆனாலும், இவற்றால் மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டி இருக்காது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் விவரித்தார்.
"இவ்விரு விஷயங்களில் ஒன்று நடந்தால், எதிர்காலத்தில் கொவிட்-19 அலைகள் எழும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒன்று, நோயெதிர்ப்பாற்றல் குறைவது. மற்றொன்று, கிருமி தொடர்ந்து உருமாறுவது.
"என்றாலும், கிருமிக்கு எதிரான நோயெதிர்ப்பாற்றல் குறைந்தாலும், கடும் நோய்ப் பாதிப்புக்கு எதிரான பாதுகாப்பு மெதுவாகத்தான் குறையும் என்பதே எதிர்பார்ப்பு.
"எனவே, முதல் சில கிருமித்தொற்று அலைகளில் ஏற்பட்டதைப்போல, சுகாதாரக் கட்டமைப்பு மீதான சுமை அளவுகடந்து போகாது என்பதே எதிர்பார்ப்பு," என்றார் பேராசிரியர் குக்.