இந்தோனீசிய சமய போதகர் அப்துல் சோமத் பத்துபாராவிற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதற்கு அவருடைய தீவிரவாத போதனைகள் முக்கியக் காரணம் என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
“உதாரணமாக, தற்கொலைப் படை தாக்குதல்கள் முறையானது என்றும் அவை சமயத்திற்காக செய்யப்படும் தியாகம் என்றும் அவர் போதிக்கிறார்,” என்றார் அமைச்சர்.
சோமத்துடைய காணொளிகள், தற்கொலை தாக்குதல்கள் சமயத்திற்காக செய்யப்படும் தியாகம் என மற்றவர்களைத் தவறான பாதையில் தூண்டுவதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.
மேலும், அவர் கிறிஸ்துவ சமயத்தைப் பற்றி இழிவான கருத்துக்களைச் கூறியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
சிலுவை சின்னம் இருப்பதால், முஸ்லிம்கள் செஞ்சிலுவை மருத்துவ ஊர்திகளில் பயணிக்கக்கூடாது, முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து கூறக்கூடாது, முஸ்லிம் அல்லாதவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது போன்ற பல்வேறு இன சமய நல்லிணக்கத்தை குழைக்கும் கருத்துக்களை சோமத் பரப்புவதாக அமைச்சர் எடுத்துக்காட்டினார்.
பல இன, பல சமய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கப்பூர் ஒருபோதும் இம்மாதிரியான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாது என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.