உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதனால் நிலையத்துக்கு அருகே உள்ள ஒன்பது வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்கள் அரசாங்கத்தால் திருப்பி பெற்றுக்கொள்ளப்படும்.
மார்சிலிங் கிரசெண்ட், மார்சிலிங் லேன் ஆகிய பகுதிகளில் உள்ள புளோக் 210த்திலிருந்து 218 வரை மேம்பாட்டுப் பணிகளுக்காக அரசாங்கத்தால் திருப்பி பெற்றுக்கொள்ளப்படும்.
732 சொந்த வீடுகள், 53 வாடகை வீடுகள், ஓர் ஒட்டுக்கடை, ஆறு கடைகள், ஒரு காப்பிக்கடை ஆகியவை சோதனைச் சாவடியின் விரிவாக்கப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என வீவக தெரிவித்தது.
மேம்பாட்டுப் பணிகள் மூலம் சுங்கச் சாவடியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும் என குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நம்புகிறது. இதோடு, 2050ஆம் ஆண்டுக்குள் 40 விழுக்காடாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் போக்குவரத்து எண்ணிக்கையைச் சமாளிக்கவும் இந்த விரிவாக்கம் உதவும்.
பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு ஈடுகட்ட, சந்தை நிலவரப்படி இழப்பீடு வழங்கப்படும். அதோடு கழகத்திலிருந்து புது வீட்டை வாங்கவும் அவர்கள் தெரிவு செய்யலாம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் 1,100 புது வீடுகள் கட்டித்தரப்படும். அவர்கள் 2028ன் இரண்டாம் காலாண்டுக்குள் தற்போது இருக்கும் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும்.