'ஓசிபிசி' வங்கி சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த 'எஸ்எம் எஸ்' மோசடி தொடர்பில் எடுத்வத நவடிக்கையில் ஏற்பட்ட கோளாறுகளை நிவர்த்தி செய்ய கூடுதலாக 330 மில்லியன் வெள்ளி மூலதனத்துக்கு நிதி ஒதுக்கும்படி சிங்கப்பூர் நாணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வங்கியின் வாடிக்கையாளர்கள் 790 பேர் சென்ற ஆண்டு நடந்த மோசடியில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மொத்தம் 13.7 மில்லியன் வெள்ளியை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நல்லெண்ண அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழந்த முழுத் தொகையையும் வங்கி ஈடு செய்தது.
அதன் பிறகு வங்கியின் நடைமுறைகள், கட்டமைப்பு ஆகியவை தொடர்பில் சுயேச்சையான மறுஆய்வு செய்யப்பட்டது. அதில் அபாயங்களை அடையாளம் காணுதல், பணப் பரிவர்த்தனைக்கு முன்னரும் அதன் பின்பும் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள், புகார்களைக் கையாள்தல், வாடிக்கையாளர்களுக்குப் பதிலளிக்க எடுத்துக்கொள்ளப்ப்படும் நேரம் போன்றவை தொடர்பில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
ஆணையத்தின் மதிப்பீடும் சுயேச்சை தரப்பின் ஆய்வு மதிப்பீடும் ஒத்துப்போனதாகக் கூறப்பட்டது. அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் தொடர்பில் 'ஓசிபிசி' வங்கி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் கூறப்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் அனைத்தையும் வங்கி நிவர்த்தி செய்ததாக ஆணையம் ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு கூடுதல் நிதி ஒதுக்கீட்டு வரம்பு குறித்து மறுஆய்வு செய்யப்படும்.
நிதி நிறுவனங்கள் மோசடிச் சம்பவங்களைத் தடுத்தல், கண்டுபிடித்தல், அவற்றைக் கையாள்தல் ஆகியவை தொடர்பில் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று ஆணையம் கூறியது. மோசடிச் சம்பவங்கள் நடந்தால் அந்த நடவடிக்கைகள் செயல்திறனுடன் விளங்குவதும் முக்கியம்.