வெளிநாட்டு ஊழியர்கள் 400 பேருக்கு இன்று இலவச பல்மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஹெல்த்சர்வ் எனும் லாபநோக்கம் இல்லாத அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையும் சேர்ந்து அதற்கு ஏற்பாடு செய்திருந்தன.
மருத்துவமனையின் பல்மருத்துவத் துறை, தேசிய பல்கலையின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளி ஆகியவற்றின் பல்மருத்துவர்கள் சோதனைகளை மேற்கொண்டார்கள்.
பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் வழிகளை அவர்கள் ஊழியர்களிடம் விளக்கினார்கள்.
ஜூரோங்கில் உள்ள தெருசான் பொழுதுபோக்கு நிலையத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது.
கடந்த ஓராண்டில், குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களிடையே விலைக் கட்டுப்படியான மருத்துவச் சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாக ஹெல்த்சர்வ் அமைப்பு கூறியது.
குறிப்பாக அவர்கள் மத்தியில் பல்மருத்துவ சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளதாக அமைப்பு சொன்னது.
விலை குறைவு என்பதால் வழக்கமாக வெளிநாட்டு ஊழியர்கள் சொந்த நாடு திரும்பும்போது பல்மருத்துவ சிகிச்சைக்கு செல்வார்கள்.
ஆனால் கொவிட்-19 பரவலின்போது நாடு திரும்ப முடியவில்லை. குறைந்த விலை பல்மருத்துவச் சேவைகளையும் பெற முடியவில்லை.
அதனால் தற்போது அந்தச் சேவைகளுக்கான தேவை உயர்ந்துள்ளதாக ஹெல்த்சர்வ் கூறியது.