கோழி இறைச்சியைக் கொண்ட உணவுவகைகளின் விலை உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஏற்றுமதிக்கு மலேசியா தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை இம்மாதம் 1ஆம் தேதியன்று தொடங்கியது.
இதையடுத்து சில உணவுக் கடைகள் அவற்றின் உணவு
வகைகளின் விலையை உயர்த்தியுள்ளன. சில கடைகள் விலையை உடனடியாக உயர்த்தாமல் பொறுத்திருந்து பார்க்கின்றன.
தீவெங்கும் எட்டுக் கோழிச் சோறு கடைகளை வைத்திருக்கும் பிரபல பூன் டோங் கீ நிறுவனம் அதன் பிரதான 'பாயில்ட் சிக்கன்' உணவுவகையின் விலையை 15 காசு அதிகரித்துள்ளது. அந்த உணவுவகையின் விலை தற்போது $36.
குறிப்பிட்ட அளவு கோழி இறைச்சி மட்டுமே கிடைப்பதால் ஒவ்வொரு பூன் டோங் கீ கடையிலும் 50லிருந்து 70 வரையிலான 'பாயில்ட் சிக்கன்' மட்டுமே விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கோழி இறைச்சி விநியோகம் செய்யும் நிறுவனங்கள் அவற்றுக்கான விலைகளை உயர்த்தியுள்ளதால் உணவுவகைகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பூன் டோங் கீ நிறுவனத்தின் இயக்குநர் ஜேசன் தியாம் கூறினார்.
கோழிச் சோற்றின் விலையை ஐந்து விழுக்காட்டிலிருந்து பத்து விழுக்காடு வரை உயர்த்த இருப்பதாக சியா ஸ்திரேட்டில் உள்ள சிங் சுவீ கீ கடையின் செயல்முறை இயக்குநர் எலிஸ் பாங் தெரிவித்தார்.
ஜூ சியாட்டில் உள்ள டிக்சன் நாசி லெமாக் கடை ஒரு மாதத்துக்கு மூடப்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஏற்றுமதிக்கு மலேசியா விதித்துள்ள தடை முடிவுக்கு வந்தால் அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று வியாபாரத்தை மீண்டும் தொடங்க அது விரும்புகிறது.
இந்நிலையில், கோழி இறைச்சிக்கான விலை அதிகரித்துள்ளபோதிலும் தங்களது உணவு
வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று சில உணவகங்கள் தெரிவித்துள்ளன. இவற்றில் லிட்டில் இந்தியாவில் உள்ள கன்சாமா தண்டூர் உணவகமும் ஒன்று.
"எங்கள் உணவகத்துக்குப் பல வாடிக்கையாளர்கள் வருகின்றனர். அதனால் வியாபாரம் சீராக உள்ளது. எனவே ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது, உணவின் தரத்தைக் குறைப்பது போன்ற மாற்றங்களை நாங்கள் செய்யமாட்டோம்," என்று கன்சாமா தண்டூர் உணவகத்தின் நிர்வாகப் பங்காளியான ராக்கேஷ் குமார் தெரிவித்தார்.