துருக்கியில் இருந்து வேளாண், உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதை விரிவுபடுத்துவது தொடர்பில் சிங்கப்பூரும் துருக்கியும் கலந்துரையாடியுள்ளன.
துருக்கியத் தலைநகர் அங்காராவில் நடைபெற்ற கலந்துரையாடலில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பால கிருஷ்ணனும் துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோகுலுவும் பங்கேற்றனர்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் துருக்கியில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்துள்ளதாக அமைச்சு கூறியது. கொவிட்-19 கிருமிப்பரவலின்போதும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சென்ற ஆண்டு 50 விழுக்காடு உயர்ந்ததாகவும் அது குறிப்பிட்டது.
துருக்கியின் ஆகப் பெரிய துறைமுகமான மெர்சின் துறைமுகத்தை சிங்கப்பூர்த் துறைமுக ஆணையம் நிர்வகித்து வருகிறது.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான முக்கியச் சந்திப்பு நடுவமாக துருக்கி ஆற்றக்கூடிய உத்திபூர்வ பங்களிப்பு குறித்தும் டாக்டர் விவியன் துருக்கிய அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.
உக்ரேனியப் போர் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்.
உக்ரேனியத் துறைமுகங்களில் இருந்து தானியங்களைப் பாதுகாப்பான முறையில் ஏற்றுமதி செய்வதற்கு உரிய தீர்வுகாண்பதில் துருக்கி மேற்கொண்ட முயற்சிகளுக்கு டாக்டர் விவியன் பாராட்டு தெரிவித்ததாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது. ஆசியானுக்கும் துருக்கிக்கும் இடையிலான ஆழமான பங்காளித்துவத்தை அமைச்சர் விவியன் வரவேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.