கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை குறித்து தந்தை
கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை ஸாஹிர் ரயீஸ் அலி, தனது இறுதி நாள்களில் உயிர் தரிக்கப் போராடியதாக அதன் தந்தை கூறியிருக்கிறார்.
நேற்று முன்தினம் சிங்கப்பூரரான ஒன்றரை வயது ஆண் குழந்தை கொவிட்-19 நோய்த்தொற்றால் மாண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
இதுகுறித்துக் குழந்தையின் தந்தை ஃபராத் ஷிபா, "உயிருக்குப் போராடிய வலிமையும் வீரமும் மிக்க எனது மகன் இன்று மரணத்துக்குப் பிந்திய உலகிற்குச் சென்றுவிட்டான்," என்று தமது 'லிங்க்ட்இன்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'என்செஃபாலிடிஸ்' எனப்படும் மூளை வீக்கத்தால் இந்தக் குழந்தை உயிரிழந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. பரிசோதனையில் குழந்தைக்கு கொவிட்-19 கிருமியுடன் மேலும் இரண்டு கிருமிகள் தொற்றியது தெரியவந்ததாக அது கூறியது.
இம்மாதம் 21ஆம் தேதி இரவு, கடுமையான காய்ச்சலுடன் சிலமுறை வலிப்பு ஏற்படவே 'கேகே' சிறார், மகளிர் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட குழந்தை பின்னர் சுயநினைவை இழந்தது. மறுநாள் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
பிள்ளையின் மூளை வீங்கியிருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் அதனைச் சரிசெய்ய ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து மூளை நரம்பியல் மருத்துவர் அல்லது வேறு மருத்துவ நிபுணரைத் தொடர்புகொள்ள உதவிகேட்டு தந்தை ஃபராத் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் 12 வயதுக்குக் கீழான குழந்தை உயிரிழந்தது இதுவே முதல்முறை.
இதனையடுத்து ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவை குறித்த ஆவணங்களை மருந்து உற்பத்தியாளர்கள் சமர்ப்பித்த பிறகு அதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது சுகாதார அமைச்சு. இந்தவேளையில் தேவைப்படும் ஆதரவை வழங்க 'கேகே' மகளிர், சிறார் மருத்துவமனை அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அது கூறியது.