தலையைப் பிடித்துத் தள்ளுவது, அறைவது, கழுத்தைப் பிடித்து இழுப்பது எனப் பாதுகாவல் அதிகாரி ஒருவர் அறிமுகமில்லாத நபரால் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த திங்களன்று நடந்தது.
புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 41ல் அமைந்துள்ள கூட்டுரிமை வீட்டு பாதுகாவல் அதிகாரி திரு அஃபின்டி முகம்மதுவைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் 45 வயது ஆடவர் ஒருவரைக் காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவு வேளையில் 55 வயது திரு அஃபின்டி, இன்னொரு பாதுகாவல் அதிகாரியுடன் கூட்டுரிமை வளாகத்தை வலம்வந்த பிறகு மின்தூக்கியில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்கியவர் மது போதையில் இருந்ததுபோல் தமக்குத் தோன்றியதாகவும் அவர் திட்டியது தமக்குப் புரியவில்லை என்றும் திரு அஃபின்டி குறிப்பிட்டார். தம் ஐந்தாண்டு பாதுகாவல் பணியில் இவ்வாறு தாக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று பகிர்ந்துகொண்டார் திரு அஃபின்டி.
காவலர்கள் சம்பவத்தைப் பற்றி தகவல் அறிந்து வருவதற்குள் தாக்கியதாகக் கூறப்படும் நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக பாதுகாவல் ஊழியர்கள் தொழிற்சங்கம் (யுஎஸ்இ) தெரிவித்தது.
தாக்கியவர் அந்த கூட்டுரிமை வளாகத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர் என்றும் நம்பப்படுகிறது. மூன்று நாள்கள் மருத்துவ விடுப்பில் இருக்கிறார் திரு அஃபின்டி.
பாதுகாவல் அதிகாரிகள் தாக்கப்படுவது தொடர்பில் இதுவரை இவ்வாண்டில் 25 சம்பவங்களை யுஎஸ்இ கையாண்டுள்ளதாகக் கூறப்பட்டது. கடந்த ஆண்டு முழுவதும் 9 சம்பவங்களே பதிவான நிலையில், இத்தகைய தாக்குதல் சம்பவங்களின் அதிகரிப்பு கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது என்றது யுஎஸ்இ.