தமது தந்தை குடும்பத்தை நிராகரித்துவிட்டு சென்ற நாள் மற்றும் தேசிய சேவையிலிருந்து தாம் வெளியேற்றப்பட்ட நாள் இவ்விரண்டும் நிகழ்ந்த மே மாதம் 10ஆம் தேதியன்று அந்த நினைவுகள் தம்மை அலைக்கழித்த சமயம் அதைப் போக்குவதற்காக சுராஜ்ஸ்ரீகன் திவாகர் மணி திரிபாதி மடக்கக்கூடிய ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு இரவுநேர மெதுவோட்டத்துக்குச் சென்றார்.
மெதுவோட்டத்தின்போது கால் தடுக்கி அவர் கீழே விழுந்தார். அதனால் கோபம் கொண்ட சுராஜ் ஸ்ரீகன் தம்மைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்த முன்பின் அறிமுகமில்லாத ஒருவரைத் தாக்க முடிவெடுத்தார்.
இப்போது 22 வயதாகும் சுராஜ் ஸ்ரீகனுக்கு நேற்று ஆயுள் தண்டனையும் 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அந்த ஆடவரின் மரணம் தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை சுராஜ்ஸ்ரீகன் ஒப்புக்கொண்டார். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அந்தச் செயலை நியாயமற்ற கொலை என்று வர்ணித்தார்கள்.
விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடையில் உதவி மேலாளரான 38 வயது டே ருயி ஹாவ் என்பவரை 2020ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இரவு 11.08 மணிக்குக் கத்தியால் குத்தியதை சுராஜ்ஸ்ரீகன் ஒப்புக்கொண்டார்.
அன்று இரவு 11.17 மணிக்கு திரு டே, 995 எண்ணை அழைத்து, "நான் பலமுறை கத்தியால் குத்தப்பட்டேன்," என்றார். அங்கு விரைந்த மருத்துவ வாகனம் உடனடியாக அவரை செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. திரு டே கடுமையான காயங்கள் காரணமாக பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
ஒருவருக்கு மரணம் விளைவிக்கும் அளவுக்குக் காயம் ஏற்படுத்தும் குற்றத்துக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
ஆயுள் தண்டனைக்குத் தங்களிடமிருந்து எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், குற்றவாளிக்கு 24 பிரம்படிகள் விதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதியைக் கேட்டுக்கொண்டனர். தற்காப்புத் தரப்போ பிரம்படி கொடுக்கப்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டது.
தண்டனை விதிப்பின்போது பேசிய நீதிபதி டேடார் சிங் கில், விதிக்ககப்பட்ட இத்தண்டனை பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தீரா துயரத்தைப் போக்கிவிட முடியாது என்றாலும் தண்டனை ஒருவித ஆறுதலை அவர்களுக்கு அளிக்கும் என்றார்.
சுராஜ்ஸ்ரீகனுக்கு மே 10ஆம் தேதி என்பது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகி விட்டிருந்தது.
மே 10ஆம் தேதி 1999ல் அவரது தந்தை, தான் தாயின் கருவில் இருந்தபோது, திருமணமான இரண்டே மாதங்களில் அவர்களை விட்டு சென்றுவிட்டார் என்று தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் எட்மண்ட் பெரேரா தெரிவித்தார்.
மே 10ஆம் தேதி 2018ல் தேசிய சேவையில் சேர்ந்தார் சுராஜ்ஸ்ரீகன். அதே ஆண்டு அக்டோபரில் தொடர்புச் சாதனத்தைச் சுத்தியல் கொண்டு உடைத்தற்காக அவர் உடலுறுதித் தகுதி இறக்கம் செய்யப்பட்டு, பின்னர் தேசிய சேவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
சம்பவ நாளன்று, தன்னைத் தாண்டி ஓடிய டேயின் பின்னால் ஓடி, அவரது முதுகில் சிங்கப்பூர் ஆயுதப்படையின் சுவிஸ் விக்டோரினோக்ஸ் டிரேல்மாஸ்டர் கத்தியால் குத்தினார். கீழே விழுந்து, டே பின்னால் திரும்பி பார்த்தபோது, சுராஜ்ஸ்ரீகன் அவரது கை, நெஞ்சு, வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாகக் குத்தினார்.
அதன் பிறகு அங்கிருந்து ஓடிய சுராஜ்ஸ்ரீகன் கத்தியை மடக்கி தமது பாக்கெட்டுக்குள் வைத்து, கையில் படிந்த ரத்தக்கரையை ஈர மெல்லிழைத் தாள் கொண்டு துடைத்துக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையின் கண்காணிப்பு கேமராக்களில் பதிந்த காட்சிகளின் உதவியுடன் சுராஜ்ஸ்ரீகன் மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தாக்கு தலில் பயன்படுத்தப்பட்ட கத்தி அவரது அறையில் இருந்தது.