குடும்பங்களை விட்டுவிட்டு அயல்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடும் வகையில், வெஸ்ட்லைட் ஊழியர் விடுதி நேற்று மதியம் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஏறக்குறைய 120 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இணை ஏற்பாட்டாளரான செஞ்சுரியன் நிறுவனத்தின் மூத்த நிர்வாக ஊழியர்கள் தோ பாயோவில் மதிய உணவு அளித்தனர்.
நோய்ப்பரவல் காலத்தில், தீவெங்கிலும் உள்ள ஒன்பது வெஸ்ட்லைட் விடுதிகளில் இருந்த ஏறக்குறைய 33,000 ஊழியர்களுக்கு உதவியது வெஸ்ட்லைட் விடுதி நிர்வாகம்.
ஈராண்டுகளாக, ஊக்கத்துடனும் நம்பிக்கையுடனும் செயலாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர்களை அங்கீ கரிக்கவும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டு ஊழியர்களின் தியாகங்களைச் சுட்டிக்காட்டி நன்றி பாராட்டிய செஞ்சுரியன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கோங் சீ மின், ஊழியர்களுடன் இன்னும் நெருக்கமான முறையில் தொடர்புகொண்டு இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை செஞ்சுரியன் எடுக்கும் என்றும் கூறினார்.
இவ்வாண்டு, வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காக பல முயற்சிகளையும் வெஸ்ட்லைட் விடுதி ஏற்பாடு செய்திருந்தது. விளையாட்டுகள், கலாசார கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் மட்டுமின்றி, பள்ளிகள், லாபநோக்கமற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் ஊழியர்களுக்கு உரையாடுவதற்கான வாய்ப்புகளை வெஸ்ட்லைட் அளித்துள்ளதாக அது தெரிவித்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதலாவது செயலாளர் (வர்த்தகம்) திரு டி. பிரபாகர், வெளிநாட்டு ஊழியர்கள், சமூகத்துக்கு ஆற்றியுள்ள பங்கைப் பாராட்டும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த செஞ்சுரியன் நிறுவனத்துக்கும் வெஸ்ட்லைட் விடுதிக்கும் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரனின் சார்பில் நன்றி தெரிவித்தார்.