நோய்ப்பரவலுக்கு முன்பிருந்த நிலைக்கு நாம் இனி திரும்புவது சாத்தியமில்லை என்பதால், சச்சரவுகளைத் தடுக்கவும் சச்சரவுகள் ஏற்படும்போது சிங்கப்பூரைப் பாதுகாக்கவும் நாம் தயாராக இருக்கவேண்டும் என்று கூறினார் கோ கெங் சுவீ தளபத்திய, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் 53வது பட்ட மளிப்பு விழாவில் பேசிய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்.
நமது நாட்டின் இறையாண்மைக்கும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பாக உள்ள ராணுவ வீரர்கள் இந்த இரண்டு வழிகளில் சிங்கப்பூரை பாதுகாப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இவ்வாண்டு, ஆயுதப்படை அதிகாரிகள், தேசிய சேவை தளபதிகள், 11 நாடுகளிலிருந்து பன்னாட்டு அதிகாரிகள், சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் என மொத்தம் 231 பேர் கோ கெங் சுவீ தளபத்திய, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றனர்.
இஸ்தானாவில், தற்காப்பு அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தேறியது.
அதிகாரிகளை உயர் பதவிகளுக்காகத் தயார்ப்படுத்தும் கோ கெங் சுவீ தளபத்திய, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, சிங்கப்பூரில் ஆக உயரிய ராணுவ கல்வியை அளிக்கிறது.
ஓராண்டு நீடிக்கும் கல்வித்திட்டத்தில், அதிகாரிகள் சமூக விழிப்புணர்வு, ராணுவத் தொழில்நுட்பத்தைக் கையாளும் வழிமுறைகள், தலைமைத்துவ அனுபவம் முதலியவற்றில் பயிற்சி மேற்கொள்வர்.
பல்வேறு பதவிகளில் உள்ள ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட இக்கல்வித் திட்டம் வாய்ப்பளிக்கிறது.
இவ்வாண்டுப் பயிற்சியில் உச்ச தேர்ச்சியடைந்து மேன்மைதங்கிய விருதைப் பெற்ற மேஜர் ஜீவா கோபால் கிருஷ்ணன், சக மாணவ அதிகாரிகளுடன் நல்ல நட்புறவுகளை வளர்த்துக்கொண்டதை நினைவுகூர்ந்தார்.
சமூகத்துக்குப் பங்களிக்கும் வண்ணம், குறைந்த வருமானமுடைய வீடுகளை செப்பனிடுவது, பாய்ஸ் டவுன் பள்ளியில் பயிலும் இளையர்களுக்கு உதவுவது ஆகியவற்றில் இவர் ஈடுபட்டிருந்தார்.
“ஓர் ஆயுதப்படை அதிகாரியாக, எனது நெறிகளையும் நம்பிக்கைகளையும் சீர்படுத்த பல வாய்ப்புகளைப் பெற்றுள்ளேன். மக்களுக்கும் ராணுவத்துக்கும் மேம்பட்ட முறையில் நான் பங்களிப்பேன் என்ற நம்பிக்கை என்னுள் பிறந்துள்ளது,” என்றார் 30 வயது மேஜர் ஜீவா.
கோ கெங் சுவீ தளபத்திய, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கடமையைத் தாண்டி, தியாக உணர்வுடன் செயல்பட்டுள்ளதைப் பாராட்டிய டாக்டர் இங் எங் ஹென், அவர்களது குடும்பத்தாருக்கும் உயரதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இத்தகைய ஆதரவும் அர்ப்பணிப்புமே சிங்கப்பூருக்கு மிக அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.