தீபாவளியை முன்னிட்டு மக்கள் செயல் கட்சி வெளியிட்ட ‘நம்பிக்கை ஒளி’ எனும் இசைக் காணொளி, அன்பையும் நம்பிக்கையையும் முன்னிலைப்படுத்தியுள்ளது. பல சிக்கல்களை எதிர்கொண்டு வந்த நாம், ஒரு சமூகமாகக் கடந்துவந்த பாதையை மறவாமல், ஒன்றிணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வண்ணம் காணொளியை அமைத்துள்ளார், இயக்குநர் திரு கே. ராஜகோபால்.
தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சமூகத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு தம்மிடம் வந்த மக்கள் செயல் கட்சியிடம், திரு ராஜகோபால் இசைக் காணொளி வடிவை பரிந்துரைத்தார். இசையே எல்லோரின் மனதையும் தொடவல்லது என்று அவர் நினைத்தார். அதற்கேற்ப, பாடல் வரிகளையும் இசையையும் அமைக்க பாடலாசிரியர் ஜெயா ராதாகிருஷ்ணனையும் பாடகர் சுஷ்மா சோமாவையும் அவர் அழைத்திருந்தார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் காலம், குடும்பங்களும் மனிதர்களும் அன்பை நினைவுகூர்ந்து, வெளிப்படுத்திய ஒரு காலமாக விளங்கியது. அதைப் பதிவு செய்ய, இளையர், முதியோர், தம்பதியர் ஆகியோர் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் சிறு சிறு உதவிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் திரு ராஜகோபால்.
“முதலில் சிங்கப்பூர் இந்தியர்களின் முகங்களைக் காட்டி அவர்களின் மகிழ்ச்சியைப் படமாக்க வேண்டும் என நினைத்தேன். பின்னர், அன்பை வெளிப்படுத்தும் செயல்களைத் தத்ரூபமாக காட்டவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இசைக் காணொளியாக மட்டுமின்றி, ஒரு ஆவணப்படமாக இதை அமைக்க முயற்சி செய்துள்ளோம்,” என்றார் திரு ராஜகோபால்.
எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வும் அன்பில் தொடங்குகிறது, ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் செயல்படுவது நம்மை முன்னெடுத்தும் செல்லும் என்ற புரிதலை உணர்த்தும் வகையில் ‘நம்பிக்கை ஒளி’யின் பாடல் வரிகளை அமைக்க முயற்சி செய்துள்ளார் பாடலாசிரியர் ஜெயா ராதாகிருஷ்ணன்.
குறிப்பாக, ‘அகவிருளே, விலகிடவே, மனதினிலே ஒளிச்சுடரே’ என்ற பாடல்வரி, நோய்ப்பரவல் காலம் நமக்குள் இருந்த அறியாமையையும் தவறான புரிதல்களையும் அகற்றிவிட வாய்ப்பளித்ததைக் குறிப்பதாகக் கூறினார், ஜெயா ராதாகிருஷ்ணன்.
சோகத்தையும் சவால்களையும் வென்று நம்பிக்கை ஏற்படுத்தும் இசையை, பாடல்வரிகளுக்கேற்ப அமைத்தனர், கர்நாடக இசை பாடகர் சுஷ்மா சோமா மற்றும் அவருடைய நண்பர் திரு ஆதித்யா பிரகாஷ்.
உணர்வுகளைத் தொடும் வண்ணத்தில் கர்நாடக இசையையும் நவீன இசையையும் ஒன்றிணைத்து இருவரும் இசை அமைக்க முயன்று உள்ளதாகக் கூறினார் சுஷ்மா சோமா.