நகைச்சுவையான கருத்துக்களுடன் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களை இம்மாதம் 15ஆம் தேதியன்று கல்யாணமாலை பட்டிமன்றக் குழு மகிழ்வித்தது.
கல்யாணமாலை நிகழ்ச்சியின் பட்டிமன்ற நட்சத்திரங்களான சாலமன் பாப்பையா, பட்டிமன்ற ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோருடன் நான்கு உள்ளூர் பேச்சாளர்கள் கடந்த சனிக்கிழமையன்று மேடையேறிப் பேசினர். ‘8 பாயிண்ட் என்டர்டெய்ன்மண்ட்’ தமிழ் பட்டிமன்ற கலைக்கழகத்துடன் இணைந்து படைத்த கல்யாணமாலை பட்டிமன்றம், ‘கார்னிவல்’ திரையரங்கில் இடம்பெற்றது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்குப் பெரிய சவாலாக இருப்பது பிள்ளைகளை வளர்ப்பதா, பெற்றோரைப் பராமரிப்பதா எனப் பேச்சாளர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
மின்னிலக்கமயமாகியுள்ள காலத்தில், உறவினர்களின்றி நவீன நகரத்தில் பிள்ளைகளை வளர்ப்பதே பெரிய சவாலென வாதிட்டனர், திருமதி பாரதி பாஸ்கர், திருமதி அகிலா இராமு மற்றும் முனைவர் மன்னை ராஜகோபாலன். பெற்றோரின் காலம் நமது வாழ்நாளில் என்றோ ஒரு கட்டத்தில் முற்று பெற்றுவிடும், பிள்ளைகளின் காலமோ நமது வாழ்நாள் முழுக்க நீடிக்கும் என்றார் திருமதி பாரதி பாஸ்கர்.
மறுபுறத்தில், பிள்ளைகள் குறித்த எதிர்பார்ப்புகளைப் பெற்றோர் குறைத்துக்கொள்ளாததே பிள்ளை வளர்ப்பில் குறுக்கிடுவதாக வாதிட்ட எதிரணியினர், தாயகத்தில் விட்டுவந்த பெற்றோரைப் பராமரிப்பதே ஆகக் கடினமாக இருப்பதை நோய்ப்பரவல் காலம் உணர்த்தியதாக முன்வைத்தனர். திரு ராஜாவின் தலைமையில், திருமதி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன், திரு யூசுப் ரஜித் ஆகியோர் அடங்கிய எதிரணி, பெற்றோரைச் சரிவர பார்த்துக்கொள்ளாதது காலமெல்லாம் மனதை உறுத்தக்கூடியது என்று வலியுறுத்தினர்.
பிள்ளைகளை வளர்க்க பள்ளிகளும் சமூகமும் இருக்கும் வேளையில், பெற்றோரைப் பராமரிக்க நாம் மட்டுமே உள்ளோம் என்று கூறி மக்களைக் கவர்ந்தார் திரு ராஜா.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் திரு சாலமன் பாப்பையா, பெற்றோர் இல்லாமலும் வாழ்ந்துவிடுவேன் என உறுதியுடன் இருக்கும் இக்காலத்துப் பிள்ளைகளைக் காட்டிலும், பிள்ளைகளின் பராமரிப்பு இன்றி நிற்க முடியாது என்ற நிலைமையில் உள்ள பெற்றோரைப் பராமரிப்பதே பெரிய சவாலாக இருக்கிறது எனத் தீர்ப்பு வழங்கினார்.
நோய்ப்பரவல் காலத்துக்குப் பின்னர் கல்யாணமாலை ஏற்பாடு செய்துள்ள முதல் வெளிநாட்டு நிகழ்வான இப்பட்டிமன்றத்தில், கல்யாணமாலை தனது 23ஆவது ஆண்டு தொடக்கத்தையும் கொண்டாடியது. 2002க்குப் பின்னர் இரண்டாவது முறையாக சிங்கப்பூர் வந்திருந்தது கல்யாணமாலை குழு. தனது அடுத்த வெளிநாட்டு நிகழ்ச்சி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதாக அது தெரிவித்தது.