உயிரிழந்த தேசிய சேவையாளரான எட்வர்ட் எச். கோவிற்கு இறுதி மரியாதை செலுத்த பல குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் இன்று திரண்டனர்.
புளோக் 91 ஹெண்டர்சன் சாலையில் உள்ள ஈரறை வாடகை வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயை அணைக்கச் சென்றபோது 19 வயதான எட்வர்ட் எச். கோ உயிரிழந்தார்.
தீயணைப்பு நடவடிக்கையின்போது மாண்ட முதல் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்பு அதிகாரி கார்ப்பரல் கோ எனக் கூறப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்டாய் தகனச்சாலையில் அவருடைய நல்லுடல் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு சடங்குப்பூர்வ இறுதி அஞ்சலி அளிக்கப்படும் என குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
கண்விழிப்புச் சடங்கிற்கு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று வந்திருந்தார். கார்ப்பரல் கோவின் பெற்றோர் தமக்கு தெரிந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். அனைவரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் இருப்பதாகக் கூறிய அவர், நாட்டுக்காக சேவையாற்றும் ஒரு குடிமகனின் நிகரற்ற தியாகம் இதுவென கூறினார்.
கார்ப்பரல் கோ 2021 நவம்பரில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் சேர்ந்தார். தேசிய சேவை முடித்தவுடன் மருத்துவப் பள்ளியில் சேர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.
கடந்த வியாழக்கிழமை தீ விபத்தின்போது கார்ப்பரல் கோ, சமையல் அறையில் மயங்கிக் கிடந்தார். அவரை குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் உயிருடன் மீட்க முயற்சி செய்து, பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
கார்ப்பரல் கோ 12 வார தீயணைப்புப் பயிற்சி மேற்கொண்டதாகவும் 20க்கும் மேற்பட்ட தீ, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.