வேலையில்லாத ஆடவர் ஒருவர் இணைய சூதாட்டக் குழு ஒன்றில் இணைந்தார். முதலில் சட்டவிரோதமாக ‘4டி’, ‘டோட்டோ’ பந்தயப் பிடிப்பு எனச் சிறிய அளவில் தொடங்கிய அவர் படிப்படியாக மற்றவற்றிலும் ஈடுபட்டு இன்று தனக்குக்கீழ் பலரை நிர்வகிக்கும் நிலையை அடைந்துள்ளார்.
இதன் மூலம் ஈட்டிய தொகையைக் கொண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக் கடனுக்காக மத்திய சேமநிதிப் பணம் என்ற போர்வையில் அவர் பணம் செலுத்தினார்.
டான் மிங் ரென் கீகன் எனும் 32 வயது ஆடவர், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வாட்டர்வே பாயிண்டில் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோத சூதாட்டக் கும்பலைப் பிடிக்க அப்போது காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அவருடன் சேர்த்து மொத்தம் 36 பேர் சிக்கினர்.
சூதாட்டம், ஊழல், போதைப்பொருள் கடத்தல், தீவிர குற்றங்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் தன்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை நேற்று அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
டான் 2016ஆம் ஆண்டு வேலையிலிருந்து விலகினார். பின்னர் 2017ல் சீ செங் என்பவருடன் சேர்ந்து பந்தயப் பிடிப்பில் ஈடுபட்டார்.
சட்டவிரோதமான பந்தயப் பிடிப்புக்கு சீ செங்கின் முகவர் கணக்கைப் பயன்படுத்தி வேலைசெய்த டானுக்கு தொடக்கத்தில் 10 விழுக்காடு தரகுப் பணம் தரப்பட்டது.
கூடுதலாக, அவர் மூலம் பந்தயம் கட்டியவர் வெற்றி பெற்றால் அவர் வென்ற தொகையில் ஐந்து விழுக்காடும் டானுக்கு வழங்கப்பட்டது. பிறகு ஒரு கட்டத்தில் தரகுப் பணம் மட்டும் பெற்றுக்கொள்வதில் இருந்து உயர்ந்து லாப, நட்டத்தில் பங்கெடுக்கும் நிலையை அடைந்தார் டான்.
அவருக்குக்கீழ் நான்கு முகவர்கள் வேலைபார்த்தனர். ஜோனதன் லீ ஜுன் யிங் என்பவருக்குப் பயிற்சி அளித்து வாராவாரம் பந்தயப் பணத்தை விநியோகம் செய்யும் பொறுப்பையும் கொடுத்தார் டான்.
லீ மூலம் 2019 ஜூலையில் 18 நாள்களில் மொத்தம் $27,614.10 பந்தயப் பணம் திரட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. அதே காலகட்டத்தில் டானிடம் வேலைபார்த்த மற்றொரு முகவர் $26,391.02 ஈட்டினார்.
மத்திய சேம நிதி தொடர்பான குற்றச்செயல்கள்
சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைக் கொண்டு மத்திய சேம நிதிக்குப் பணம் செலுத்தியதையும் டான் ஒப்புக்கொண்டார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றை வாங்க விரும்பிய அவர், நிலையான வருமானம் இருப்பதாகக் காட்டும் பொருட்டு சில நிறுவனங்கள் மூலம் அவற்றின் ஊழியர் என்ற முறையில் மசேநிதிக்குப் பணம் செலுத்தினார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர், டானுக்கு 17 முதல் 20 மாதச் சிறைத்தண்டனையுடன் $60,000 அபராதம் விதிக்கக் கோரினார்.
ஆனால் தனது எட்டு மாத இளைய மகளை உறவினர் இல்லங்களுக்கு அழைத்துச்சென்று காட்ட விரும்புவதாகவும் சீனப் புத்தாண்டுக்குப் பிறகு தான் சிறைத்தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கும்படியும் டான் கோரியுள்ளார்.
இதனையடுத்து அடுத்த மாதம் 25ஆம் தேதி டானுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கமாக இவ்வாறு செய்யப்படுவதில்லை என்றார்.