அனுஷா செல்வமணி
நெருக்கடிச் சூழலில் சிக்கிக்கொண்டோருக்கு உதவிக்கரம் நீட்டியவர்களை அங்கீகரிக்கும் விதமாக, சமூகத்தில் உதவிக்கு முதலில் விரைவோர்க்கான விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களில் ஒருவர் 48 வயது கேரி ஹாரிஸ். இவர் நேற்று மூன்று விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
ராயல் கிங்ஸ் ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநரான கேரி, மூன்று வெவ்வேறு விபத்துகளின்போது , பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கினார்.
கேரியுடன், சுல்தான் பள்ளிவாசலைச் சேர்ந்த மேலும் ஏழு தொண்டூழியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
ஆறு நாள்களுக்கு முன்பு, அராப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ஸம் ஸம் உணவகத்திற்கு அருகில் இரவுநேரத்தில் அடிபட்டுக் கிடந்த ஒரு பெண்ணைப் பார்த்தார் கேரி.
அப்பெண்ணுக்கு உதவி அளித்ததுடன், உடனடியாக மருத்துவ வாகனத்தைத் தொடர்புகொண்டார்.
முன்னதாக, கடந்த மாதம் சிலேத்தார் விரைவுச்சாலையில், மண்டாய் சாலைக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியை அணுகி, சம்பவ இடத்துக்கு அவசர மருத்துவ வாகனம் வரும்வரை அந்த இளையரைக் கண்காணித்தார் கேரி.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம், டிக்சன் சாலைக்கும் கிளைவ் சாலைக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் திறன்பேசியைப் பயன்படுத்தியவாறே சாலையைக் கடந்தபோது வாகனம் மோதி காயமுற்ற இல்லப் பணிப்பெண்ணுக்கு கேரி உதவினார்.
கால்களிலும் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்ட அந்தப் பெண்ணுக்கு மன ஆறுதல் அளித்து, சாலையில் மக்களின் நடமாட்டத்தையும் இவர் கட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
சமூகத்தில் உதவிக்கு முதலில் விரைவோர்க்கான விருதுகளை வழங்கும் விழாவிற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஏற்பாடு செய்திருந்தது.
இவ்விழா, நேற்றுப் பிற்பகல் குவீன்ஸ்டவுனில் அமைந்துள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதல் பிரிவில் இடம்பெற்றது.
அப்பிரிவின் தளபதி கேரி உள்ளிட்ட தொண்டூழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
“ஒருவர் நெருக்கடியான சூழ்நிலையில் துன்பப்படும்போது, தொலைவில் நின்று வேடிக்கை பார்ப்பதிலும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதிலும் கவனம் செலுத்துவோரைக் காண வேதனையளிக்கிறது.
“இதற்குப் பதில், முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதே சிறந்த பண்பு.
“மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்க இதுபோன்ற விருதுகள் உதவும்,” என்றார் கேரி.
நேற்று விருது பெற்றவர்களில் ஆக இளையவர், பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவரான 18 வயது முகமது அசீம் முகமது அலி.
பொதுமக்களுக்கு உதவ முன்வருவதில் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக விளங்குவதாக இவர் பாராட்டப்பட்டார்.