இந்தோனீசியாவில் அமைந்திருக்கும் லாபுவான் பாஜோ நகரில் இன்றும் நாளையும் நடைபெறும் 42வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான பேராளர் குழு கலந்துகொள்கிறது.
இவ்வாண்டின் ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தோனீசியா ஏற்பாடு செய்யும் இரு உயர்மட்ட உச்சநிலை மாநாட்டில் இது முதலாவது.
‘ஆசியான் முக்கியம்: வளர்ச்சியின் மையப்பகுதி’ என்ற கருப்பொருளில் அமையும் இந்தோனீசியாவின் ஆசியான் தலைமைத்துவம், ஆக்ககரமான முன்னோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டத்தைப் பறைசாற்றுகிறது என்று பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
குறிப்பாக ஆசியானின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் பொருளியல் பங்காளித்துவத்திலும் சமூக வளர்ச்சி முயற்சிகளிலும் இந்த செயல்திட்டம் முக்கியம் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
ஆசியானின் வளர்ச்சியைப் பரிசீலித்து; மின்னிலக்க, பசுமைப் பொருளியலை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த கலந்துரையாடல்களை ஆசியான் தலைவர்கள் மேற்கொள்வார்கள்.
திறந்த, அனைவரையும் அரவணைக்கும், நிலைத்தன்மைமிக்க வட்டாரக் கட்டமைப்பைத் தொடர்ந்து நிலைநாட்டும் நோக்கத்தில் ஆசியான் தலைவர்கள் புவிசார் அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசுவார்கள் என்று பிரதமர் அலுவலகம் மேலும் சொன்னது.
அனைத்துலக மற்றும் ஆசியான் வட்டார முன்னேற்றங்கள் உட்பட மியன்மார் நாட்டு நிலவரமும் கலந்துரையாடல்களில் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக பேச்சுவார்த்தை மூலம் மியன்மார் சர்ச்சையை சமாளிக்கும்படி ஆசியான் தலைவர்களுக்கு வலியுறுத்தினார் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ.
“ஆசியான் வெளிப்படையாக, எவருடனும் எந்த நாட்டுடனும் ஒத்துழைக்கவேண்டும் என்று நாம் விரும்புவதால், ஆசியான் நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை கொள்கையின்படி தீர்வு காணவேண்டும். இது மிக முக்கியம், குறிப்பாக மியன்மாரைப் பொருத்தவரையில்,” என்று ஞாயிற்றுகிழமை (மே 7) லாபுவான் பாஜோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு விடோடோ.
இதற்கிடையே மியன்மாரில் மனிதநேய உதவி வழங்கும் ஆசியான் அதிகாரிகள் சென்ற வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டன.
சிங்கப்பூர் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அப்போது அந்த வாகனங்களில் இருந்ததாகவும் தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் மியன்மாரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சான் மாநிலத்தில் நிகழ்ந்தது என்றும் இவ்விரு சிங்கப்பூரர்கள் யங்கோன் நகருக்கு திரும்பியுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்தது. இதுவரை தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவிக்கிறது என்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் மனிதநேயத் தூதரகப் பணியாளர்களின் பாதுகாப்பை நிலைநாட்டுவது முக்கியம் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சொன்னார்.
இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு மே 8ஆம் தேதி நிகழ்ந்த மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் அதிபர் விடோடோவும் கண்டனம் தெரிவித்தார்.
பிரதமர் லீயுடன் திருமதி லீ, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.