செப்டம்பர் மாதத்திலிருந்து புதிய வேலை அனுமதி அட்டை விண்ணப்பதாரர்களின் கல்வித் தேர்ச்சியைச் சரிபார்க்க 12 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
புதிய வேலை அனுமதி அட்டைக்கு விண்ணப்பம் செய்யும் முதலாளிகள், செப்டம்பர் மாதத்திலிருந்து டிப்ளோமா, உயர்கல்வித் தேர்ச்சிகள் சரிபார்த்து உறுதி செய்யப்பட்டதாக ஆதாரச் சான்று அளிக்கவேண்டும் என்று மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. துணைச் சோதனை (கொம்பஸ்) கட்டமைப்பின்கீழ் இதற்குப் புள்ளிகள் வழங்கப்படும்.
முதலாளிகள் வேலை அனுமதி அட்டைக்கு விண்ணப்பம் செய்யும்போது ஒருமுறை மட்டும் விண்ணப்பதாரரின் கல்வித் தேர்ச்சியை சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணிச் சோதனை நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஆதாரச் சான்றை செப்டம்பருக்கு முன்பாகவும் கல்வி அமைச்சு ஏற்கும்.
மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் ஒன்றின்வழி ஆதாரச் சான்றைப் பெறலாம்.
இதற்குமுன் கொம்பஸ் கட்டமைப்பின்கீழ் பரிசீலிக்கப்படாத வேலை அனுமதி அட்டைகளைப் புதுப்பிக்க, 2024 செப்டம்பர் மாதத்திலிருந்து ஆதாரச் சான்று தேவைப்படும். அடுத்தடுத்த புதுப்பிப்புகளுக்கு ஆதாரச் சான்று தேவைப்படாது.
ஏம் ஸ்கிரீனிங் (ஸ்டர்லிங் ரிஸ்க்), அவ்வன்ஸ், பெக்கிராவுண்ட் ஸ்கிரீனிங் (ஹயர்ரைட்) சிங்கப்பூர், சிசிவ் சிங்கப்பூர், கிராஸ்செக் (டேட்டாஃபுளோ), ஈச்செக், ஃபர்ஸ்ட் அட்வான்டேஜ், ஜிபிசி கேட்வே, ரிஸ்க் மானேஜ்மன்ட் இன்டெலிஜன்ஸ், வெரிட்டி இன்டெலிஜன்ஸ், வெரிமார்க், விரோ ஸ்கிரீனிங் ஆகிய 12 நிறுவனங்கள் பின்னணிச் சோதனை மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு அடிப்படைகளின் பேரில் அனுமதி பெற்ற இந்நிறுவனங்கள் உலகளவில் செயல்படுவதோடு, கல்வித் தேர்ச்சிகளையும் கல்விக் கழகங்களையும் சரிபார்த்து சான்றளிக்கின்றன. இவற்றில் ஆறு நிறுவனங்கள், எந்த நாட்டில் பெறப்பட்ட கல்வித் தேர்ச்சி என்பதன் அடிப்படையில் பல்வேறு கட்டணங்கள் விதிக்கின்றன.
ஒவ்வொரு சரிபார்ப்புக்கும் கட்டணம் $30 முதல் $60. சரிபார்த்து சான்றளிப்பதற்கு ஓரிரு வாரங்கள் எடுக்கும்.
எனவே, முதலாளிகள் முன்கூட்டியே திட்டமிட்டு இந்தச் சோதனைகளுக்கான நேரத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு மனிதவள அமைச்சு நினைவூட்டியது.
முதலாளிகளுக்கு மேலும் உதவ, கொம்பஸ் வழிகாட்டியையும் அமைச்சு தயாரிக்கிறது.
கல்வித் தேர்ச்சி தவிர, பன்மயம், உள்ளூர் ஊழியர்களுக்கான ஆதரவு போன்றவற்றுக்கும் கொம்பஸ் புள்ளிகள் வழங்குகிறது.
டிசம்பர் 2022 நிலவரப்படி, சிங்கப்பூரில் சுமார் 187,300 ஊழியர்கள் வேலை அனுமதி அட்டை பெற்றிருந்தனர்.
“பின்னணிச் சோதனையிடும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கையில்” கட்டணம், சரிபார்ப்பதற்கான நேரம் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் சிம் கிம் குவான் கூறினார்.
“சரிபார்ப்பு நிபந்தனையால் முதலாளிகளின் ஆட்சேர்ப்புச் செலவு வெகுவாக அதிகரிக்காமலும் ஆட்சேர்ப்பு தாமதமடையாமலும் இருப்பதை இது உறுதிப்படும்,” என்றார் அவர்.