அல்ஜுனிட் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா கொண்டிருந்த ஒரு தகாத தொடர்பு பற்றி அவருடைய வாகன ஓட்டுநரிடம் இருந்து செய்தி கிடைத்ததை அடுத்து அந்த ஓட்டுநரை விசாரிப்பதற்காக கட்சியின் தலைமைத்துவம் அழைக்கவில்லை.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.
அந்த வாகன ஓட்டியை விசாரணைக்கு ஏன் அழைக்கவில்லை என்று செம்பவாங் குழுத்தொகுதி உறுப்பினர் விக்ரம் நாயர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு திரு பிரித்தம் சிங் பதிலளித்துப் பேசினார்.
தகவல் தெரிவித்தது யார் என்ற ரகசியத்தைக் காப்பாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்றும் திரு விக்ரம் கேட்டிருந்தார்.
மக்கள் செயல் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி இருந்ததன் தொடர்பில் பிரதமர் லீ சியன் லூங் புதன்கிழமை அமைச்சுநிலை அறிக்கையை மன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
திரு சிங் அதன் தொடர்பில் சில கருத்துகளை முன்னதாகத் தெரிவித்தார்.
தன்னுடைய கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான பண்பு நயமற்ற நடத்தைகள் ஏதாவது இருப்பின் அதை கட்சி கையாண்ட விதம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தான் ஆயத்தமாக இருப்பதாக திரு சிங் தெரிவித்து இருந்தார்.
திரு சிங், ஜூலை 19ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசினார்.
திரு பெரேராவும் கட்சியின் முன்னாள் மூத்த உறுப்பினரான நிக்கோல் சியா என்பவரும் தங்களுக்கு இடையிலான தொடர்பு பற்றி பொய் சொன்னதை அடுத்து கட்சியில் இருந்து அவ்விருவரும் விலகிவிட்டதாக திரு சிங் அப்போது தெரிவித்தார்.
பொதுவாக முறையான அமைப்பு ஒன்றில், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் கிடைக்கும்போது அது முக்கியமான ஒன்றாகக் கருதப்படும்.
அந்தத் தகவலை தெரிவித்தவரைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேல் விசாரணைக்காக அவர் அழைக்கப்படுவார்.
இதுவே அத்தகைய அமைப்பின் பொதுவான நடைமுறையாக இருக்கும் என்று புதன்கிழமை திரு விக்ரம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த திரு சிங், அந்த வாகன ஓட்டுநர் பகிர்ந்துகொண்ட தகவலைக் கட்சி கையாள வேண்டி இருந்ததாகக் கூறினார்.
தகவல் தெரிவித்தவர் என்ற முறையில் அந்த வாகன ஓட்டுநரின் அடையாளத்தைப் பாதுகாப்பதன் தொடர்பில் கருத்துரைத்த திரு சிங், அந்த ஓட்டுநர், கணிசமான எண்ணிக்கையிலான பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களின் எண்களைப் பெற்றிருந்தார்.
புகார்களை அவர்களுக்கு அவரே தெரிவித்தார் என்று கூறினார்.
தகவல் தெரிவித்தவர் யார் என்பதைத் தான் வெளியிடவில்லை என்றும் ஆனால், தான் பெற்ற தகவல்கள் சரிதானா என்பதை திரு பெரேராவுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருந்தது என்றும் திரு சிங் தெரிவித்தார்.
பாட்டாளிக் கட்சி நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு சிங் தெரிவித்த கருத்துகளைச் சுட்டிக்காட்டிய சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், திரு பெரேரா பற்றிய தகவல்களைத் தெரிவித்தவர் யார் என்பதைத் திரு பெரேராவிடம் தெரிவிக்கவில்லை என்று திரு சிங் கூறி இருந்ததை விளக்கும்படி அவரிடம் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த திரு சிங், அந்த வாகன ஓட்டுநர் அவரின் பெயரில் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்களுக்கும் செய்தியை அனுப்பி வந்ததாகக் கூறினார்.
தான் யார் என்பது வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்று அந்த வாகன ஓட்டுநர் விரும்பினார் எனத் தான் நினைக்கவில்லை என்றும் திரு சிங் குறிப்பிட்டார்.