சிங்கப்பூரின் மக்கள்தொகை 2023 ஜூன் மாத நிலவரப்படி 5.92 மில்லியனாக இருக்கிறது.
இது முந்திய ஆண்டின் மக்கள்தொகையைவிட 5% அதிகம். பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் சிங்கப்பூரர்களின் ஆயுள் கூடுவதாலும் மக்கள்தொகை தொடர்ந்து வேகமாக மூப்படைகிறது.
அரசாங்கத்தின் சுருக்கமான வருடாந்திர மக்கள்தொகை அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற சராசரி மக்கள்தொகைப் பெருக்கம், கொவிட்-19 சூழலில் 2020ஆம் ஆண்டிலும் 2021ஆம் ஆண்டிலும் இடம்பெற்ற மக்கள்தொகை சரிவைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், அதற்கு முந்திய ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்றதைப் போலவேதான் இருக்கிறது.
மக்கள்தொகையில் குடிமக்களின் எண்ணிக்கை 1.6% கூடி 2023 ஜூன் நிலவரப்படி 3.61 மில்லியனாக இருந்தது. 2022 ஜூனில் இந்த எண்ணிக்கை 3.55 மில்லியனாக இருந்தது
இதே காலகட்டத்தில், நிரந்தரவாசிகள் எண்ணிக்கை 3.7% அதிகரித்து 0.52 மில்லியனிலிருந்து 0.54 மில்லியனாகக் கூடியது.
குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லாத மற்றவர்கள் எண்ணிக்கை 2023 ஜூனில் 13.1% கூடி 1.77 மில்லியனாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2022 ஜூனில் 1.56 மில்லியன்.
வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு இங்கு வந்தவர்கள் அதிகரித்ததே இதற்குப் பெரிதும் காரணம். அனைத்துவகை வேலை அனுமதிகளிலும் அதிகரிப்பு இருந்தது.
கட்டுமானம், கடல்துறை, கப்பல் பட்டறை, பதனீட்டுத் துறைகளுக்கு வேலை அனுமதிச் சீட்டு பெற்று இங்கு வந்தவர்கள் எண்ணிக்கைதான் ஆக அதிகமாகக் கூடியது. கடந்த 2022ல் 23,082 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது; 34,493 பேர் நிரந்தரவாச உரிமை பெற்றனர்.
இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டின் அளவைவிடச் சற்று அதிகம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.