உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, குடியிருப்பாளர்கள் நடு இலையுதிர் கால விழாக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கையில், அவர்களுக்கு அருகே ஒரு மரம் திடீரென்று விழுந்தது.
அதில் எவருக்கும் காயமில்லை.
வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து செம்பவாங் நகர மன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
நகர மன்றத்தின் தோட்டக்கலைப் பிரிவின் அதிகாரிகள் இரவு 9.45 மணியளவில் தோட்டக்கலை ஆர்வலர்கள் சிலரின் உதவியுடன் அந்த 10 மீட்டர் உயரமான மரத்தை அப்புறப்படுத்தியதாகவும் திருவாட்டி போ கூறினார்.
அந்தப் பணியில் ஐந்து ஊழியர்களும் ஒரு பாரந்தூக்கும் லாரியும் பயன்படுத்தப்பட்டதாகவும் மரம் இரவு 10.45 மணிக்கு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த மரத்தில் சில சிதைவுகளும் கரையான் அரிப்புகளும் தென்பட்டதாக சனிக்கிழமையன்று மரத்தைச் சோதித்த மரம் தொடர்பான நிபுணர் தெரிவித்தாகவும் திருவாட்டி போ சொன்னார்.
இனி அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மரங்களின் நிலை குறித்து சோதனை நடத்தப்படும் என்றும் கூறிய அவர், செம்பவாங் நகர மன்றம் அப்பணிகளை மேற்கொள்ளும் என்றார்.