சிங்கப்பூரில் நடுத்தர வருமானம்உடையவர்களின் சம்பளம் வேகமாகக் கூடியது

சிங்கப்பூரில் நடுத்தர வருமானம்உடையவர்களின் சம்பளம் வேகமாகக் கூடியது

2 mins read
4cf7dc8f-1d24-42f5-b699-64aba8bcb9b2
அதிக உற்பத்தி அல்லது பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்த நடுத்தர வருமானமுள்ள ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2011க்கும் 2021க்கும் இடையே நடுத்தர வருமானம் கொண்ட ஊழியர்களின் சம்பளம் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாகக் கூடியிருக்கிறது.

சிங்கப்பூர் நாணய ஆணையம் திங்கட்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது.

சிங்கப்பூரில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆராயப்பட்டது.

அப்போது ஊழியர் அணியில் பெரும் பங்கு வகிக்கும் நடுத்தர வருமானமுள்ள ஊழியர்களின் சம்பளம் 42 விழுக்காடு வரை அதிகரித்திருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு மேல் உள்ளவர்கள் கீழ் உள்ளவர்களின் சம்பளம் 36 விழுக்காடு கூடியது.

நடுத்தர வருமானம் கொண்டர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் (50 விழுக்காடு) வருமான உயர்வு பெற்றனர்.

இவர்களில் 20 முதல் 25 விழுக்காட்டினர் 2011ஆம் ஆண்டிலிருந்து அதே சம்பளத்தில் இருந்தனர். எஞ்சியவர்களின் வருமானம் கூடியது அல்லது குறைந்தது என்று ஆணையம் குறிப்பிட்டது.

அதிக உற்பத்தி உள்ள நிறுவனங்கள் அல்லது பெரிய நிறுவனங்களுக்கு மாறியவர்களில் நடுத்தர வருமான ஊழியர்களின் சம்பளம் பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் குறைந்த உற்பத்தி அல்லது சிறிய நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பள உயர்வு இதே காலகட்டத்தில் 50 விழுக்காடாக இருந்தது.

2011ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை சிங்கப்பூரின் சராசரி பொருளியல் வளர்ச்சி ஆண்டுக்கு 3.7 விழுக்காடாக மெதுவடைந்தது. இது, இதற்கு முந்தைய பத்தாண்டு 5.9 விழுக்காடு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் குறைவு.

சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் முக்கிய இடம் பிடிக்கும் என்று கூறிய ஆணையம், நடுத்தர வருமானமுள்ள ஊழியர்களின் வேலை, வருமானத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.

இத்தகைய தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டால் அல்லது ஊழியர்கள் தங்களுடைய திறனை மேம்படுத்தாமல் இருந்தால் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம் அல்லது வேலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதனால் நடுத்தர வருமான ஊழியர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றது ஆணையம்.

“தொழில்நுட்ப வளர்ச்சியை சாதமாக பயன்படுத்திக்கொள்வதைப் பொறுத்து நடுத்தர வருமானமுள்ளவர்களின் ஊதிய உயர்வு இருக்கும். ஊழியர்களின் திறனை மேம்படுத்துதல் அல்லது மறுபயிற்சி பெறுதல் ஆகியவற்றில் முத்தரப்பு எடுக்கும் முயற்சிகளால் ஊழியர்கள் அதிக சம்பளமுள்ள வேலைகளைப் பெற வாய்ப்பளிக்கும்,” என்று மத்திய வங்கி கூறியது.

2011 முதல் 2021 வரையில் நடுத்தர வருமான ஊழியர்களில் பெரும்பாலோரின் கல்வி நிலையில் மாற்றமில்லை. ஆனால் மேற்படிப்புக்குச் சென்றவர்கள், மற்றவர்களைவிட அதிக சம்பள உயர்வைப் பெற்றனர்.

பரந்த அளவில் பார்த்தால் அடுத்த சில காலாண்டுகளில் தொழிலாளர் தேவை குறையலாம். இருந்தாலும் இதனை உள்நாட்டு சேவை, பயணம் தொடர்பான துறைகளின் வளர்ச்சி ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்