அடுத்த பணியை ஏற்கத் தயார் என்று கூறியுள்ள துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், எதிர்க்கட்சிகளிடமிருந்து மக்கள் செயல் கட்சியின் கொள்கைகள் வேறுபட்டிருப்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற மக்கள் செயல் கட்சி(மசெக) மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களிடையே அவர் பேசினார்.
வார்த்தைகளைவிட செயல்கள் சத்தமாக ஒலிக்கும் என்று மசெக நம்புவதாக அவர் கூறினார்.
“ஆனால் நாம் செயலில் மட்டுமே கவனம் செலுத்தினால் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தவறிவிடுகிறோம். அந்த வகையில் நம்மிடம் ஒரு பெரிய சிக்கல் இருப்பதாக நினைக்கிறேன்,” என்று மசெகவின் துணைத் தலைமைச் செயலாளருமான திரு வோங் குறிப்பிட்டார்.
“எதிர்க்கட்சிகள் கொள்கைகளிலிருந்து மக்கள் செயல் கட்சியின் கொள்கைகள் வேறுபட்டு இருப்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளின் உத்தேச கொள்கைகளின் பெரும்பாலான பகுதி மக்கள் செயல் கட்சியின் கொள்கைகளைப் போல உள்ளது. ஆனால் சில பகுதிகளில் அடிப்படையிலேயே அவை மாறுபட்டவை. இந்த நிலையில் நமது கொள்கை ஏன் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சிறந்தது என்பதை நாம் விளக்க வேண்டும்.
“கொள்கைகள் வெற்றிடத்தில் உருவாகிவிடாது. அரசியல் ரீதியாக உருவாகின்றன. நீண்டகால கொள்கைகள் நிறைவேற நீடித்த, நிலையான அரசாங்கம் தேவை,” என்று அவர் கூறினார்.
“ஒரு கட்சி பதவியில் ஊசலாடிக் கொண்டிருந்தால் அக்கட்சியின் தலைவர்கள் நீண்டகால திட்டங்கள் பற்றி சிந்திப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“சிங்கப்பூர் அப்படிப்பட்ட சூழலைத் தவிர்த்துள்ளது. மக்கள் செயல் கட்சியின் வலுவான அரசாங்கத்தை சிங்கப்பூர் பெற்றுள்ளது. ஆனால், மக்கள் ஆதரவு என்றென்றும் அப்படியே இருந்துவிடாது.. ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறேன். மீண்டும் இதைச் சொல்கிறேன். அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி உறுதியான, முழுமையான வெற்றியைப் பெறும் என்று நான் கருதவில்லை,” என்று திரு வோங் தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் செயல்பாடுகளை சரிபார்க்க அதிக எதிர்க்கட்சிகள் தேவை என விரும்பும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது, இப்போது முதல் ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் எத்தனை இடங்களைப் பெறுகின்றன என்பதைப் பற்றி இருக்காது. மக்கள் செயல் கட்சியால் அரசாங்கத்தை அமைக்க முடியுமா, அது வலுவாக இருக்குமா என்பதைப் பற்றியதாக இருக்கும்,” என்றார் அவர்.
வரும் ஆண்டுகளில் தானும் இதர நான்காம் தலைமுறைத் தலைவர்களும் மூன்று துறைகளில் கட்சித் தொண்டர்களை ஈடுபடுத்த விரும்புவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் மேலும் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சியின் தொடர்பை விரிவுபடுத்துவது, அதன் செய்திகளை செம்மையாக்குவது மற்றும் கட்சியின் அமைப்பை மறு ஆய்வு செய்து வலுப்படுத்துவது ஆகியவை அந்த மூன்று துறைகளாகும்.