அண்மை ஆண்டுகளில் மவுண்ட்பேட்டன் வட்டாரத்தில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு அதிக குப்பை சேர்வதாகத் தகவல் வந்திருக்கிறது.
அதனால் இவ்வாண்டின் கொண்டாட்டத்திற்குப் பிறகு குப்பையை அகற்றுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொள்ளும் பதாகை அவ்வாட்டாரத்தில் எழுப்பப்பட்டிருந்தது. தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆதரவுடன் மவுண்ட்பேட்டன் குடியிருப்பாளர் கட்டமைப்பு (ரெசிடண்ட்ஸ் நெட்வோர்க்) அந்தப் பதாகையை எழுப்பியது.
பதாகையில் இடம்பெற்ற வேண்டுகோள் மேலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதைத் தவிர்க்க அது அகற்றப்படும் என்று மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியோவ் சுவான் தெரிவித்தார். அந்த வட்டாரத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் மெயர் பூங்காவிலும் தஞ்சோங் ரூ திடலிலும் நடைபெற்றதாக திரு லிம் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய பதாகைக்கு மேலே மவுண்ட்பேட்டன் குடியிருப்பாளர்களுக்கு திரு லிம் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் பதாகையையும் மக்கள் கழகம் எழுப்பியிருந்தது. அந்தப் பதாகை அகற்றப்படாது என்று திரு லிம் சொன்னார்.
தனது தொகுதியில் உள்ள பல இடங்களில் அந்த வாழ்த்துப் பதாகை இருப்பதை அவர் சுட்டினார்.
“ஓர் இடத்தில் இரு பதாகைகளும் ஒன்றின் மேல் ஒன்றாக எழுப்பப்பட்டிருந்தன. அதனால் குறிப்பிட்ட ஓர் இனம் குறிவைக்கப்பட்டதாகத் தவறான கருத்து தலைதூக்கியது. நோக்கம் அதுவல்ல,” என்றும் அவர் விவரித்தார்.
அந்த வட்டாரத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது. மத்தாப்புகளும் பிளாஸ்டிக் தாள்களும் புல் திடல்களில் கிடந்தது அப்படங்களில் தெரிந்தது. திடலின் சில பகுதிகளில் புல் எரிந்திருந்தது.