மருந்தின் ஆற்றலை எதிர்க்கவல்ல பாக்டீரியாவுக்கு எதிராகத் தீர்வுகளைக் கண்டறிய, ஆய்வுக்குழு ஒன்றின் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு $10 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போதுள்ள ‘ஆன்டிபயாடிக்ஸ்’, அதாவது நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத தொற்றுகளை எதிர்கொள்ள ஆராய்ச்சிக்குழு வழிகள் கண்டறிய முற்படும்.
மற்ற மருந்துகளால் தீர்க்கப்படாத தொற்றுகளைக் குணப்படுத்த, அதிக ஆற்றலுடைய ‘கார்பெபேனம் ஆன்டிபயாடிக்ஸ்’ மருந்து நாடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அனைத்துலக அளவில் இவ்வகை மருந்தாலும் குணப்படுத்த முடியாத பாக்டீரியா தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ‘கார்பெபேனம் ஆன்டிபயாடிக்ஸ்’ மருந்தால் தீராத தொற்றுச் சம்பவங்கள் 1,500க்கும் அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில், சுமார் 30 உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
சிங்கப்பூரில் இந்த பாக்டீரியா சம்பவங்கள் மருத்துவமனைகளில் மட்டுமே பதிவாகின்றன. ஆனால், பல நாடுகளில் சமூகத்தில் உள்ளோரையும் பாக்டீரியா வகைகள் பாதிப்பதாக ‘அம்ரிடாஸ்’ ஆய்வுக்குழுவின் முதன்மை புலனாய்வாளர் பேராசிரியர் சு லி யாங் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆய்வு மன்றம் வழங்கும் $10 மில்லியன் மானியத் தொகையை ‘அம்ரிடாஸ்’ ஆய்வுக்குழு பயன்படுத்தி, மருந்தின் ஆற்றலை எதிர்க்கும் கிருமிகளுக்கு எதிராகத் தீர்வுகளைக் கண்டறிய உள்ளது.
ஆய்வுக்குழு தங்களின் ஆராய்ச்சியில் வெற்றி கண்டால், ஆன்டிபயாடிக் சிகிச்சைகளைச் சிறப்பான முறையில் எவ்வாறு சோதனையிடுவது, மருந்தாற்றலை எதிர்க்கும் கிருமி குடலில் பரவுவதை எவ்வாறு தடுப்பது போன்ற அம்சங்களில் திருப்புமுனை ஏற்படக்கூடும்.