உள்நாட்டு ஊடக நிறுவனங்கள் அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற ஆதரவு தரும் புதிய நிதித் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கவிருக்கிறது.
மெய்நிகர் படைப்புகளின் உருவாக்கத்திற்கும் அவற்றுக்கு நிதியுதவி அளிக்கவும் கூடுதல் தொகையை அரசாங்கம் முதலீடு செய்யவிருக்கிறது.
இந்தப் புதிய நடவடிக்கைகள் குறித்து ஆசியத் தொலைக்காட்சிக் கருத்தரங்கு மற்றும் சந்தை 2023 எனும் நிகழ்ச்சியில் தொடர்பு, தகவலுக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் அறிவித்தார்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் சிங்கப்பூர் ஊடக விழாவின் ஓர் அங்கமாக, அந்த நிகழ்ச்சி, டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது.
$30 மில்லியன் மதிப்பில் அனைத்துலக இணைத் தயாரிப்பு நிதி தொடங்கப்படும். உள்ளூர் ஊடக நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர்ச் சிறப்பை அனைத்துலக அரங்கிற்கு ஏற்ற வகையில் எடுத்துச்சொல்லும் படைப்புகளை உருவாக்க அது ஊக்கமளிக்கும்.
டிசம்பர் 11ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, சிங்கப்பூர் ஊடக நிறுவனங்கள் இந்த நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், மெய்நிகர் படைப்பு, புத்தாக்க நிதிக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக $25 மில்லியன் நிதி ஒதுக்கப்படவிருக்கிறது. சென்ற ஆண்டு 5 மில்லியன் வெள்ளியுடன் இந்த நிதி தொடங்கப்பட்டது.