காப்புறுதி நிறுவனங்கள் நொடித்துப் போகும் பட்சத்தில் காப்புறுதித் திட்ட உரிமையாளர்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காப்புறுதித் திட்ட உரிமையாளர்களின் பாதுகாப்பு முறைக்கான உத்தேச மாற்றங்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிட்டது.
2011ல் உருவாக்கப்பட்ட இந்தப் பாதுகாப்பு முறை, காப்புறுதி நிறுவனங்கள் நொடித்துப் போகும்போது காப்புறுதித் திட்ட உரிமையாளர்களைப் பாதுகாக்கும். உதாரணத்துக்கு, காப்புறுதி நிறுவனங்கள், காப்புறுதித் திட்ட உரிமையாளர்களின் நிதி கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதபோது, இந்தப் பாதுகாப்பு நடைமுறைகள் அவர்களைப் பாதுகாக்கும்.
உரிமையாளர்களின் ஆயுள் காப்புறுதித் திட்டங்களையும் சில பொதுவான காப்புறுதித் திட்டங்களையும் அந்த வழிமுறைகள் உள்ளடக்கிப் பாதுகாப்பு வலையாகச் செயல்படும்.
“சிங்கப்பூரில் எந்தவொரு காப்புறுதி நிறுவனமும் நொடித்துப் போனதில்லை. அதன் காரணமாக, இந்தக் காப்புறுதிப் பாதுகாப்புத் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை,” என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வைப்புத்தொகை காப்பீட்டுக் கழகமும் நடைமுறைகளை வலுப்படுத்தும் மாற்றங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
உத்தேச மாற்றங்கள் பற்றிய தங்கள் எழுத்துபூர்வ கருத்துகளை பொதுமக்கள் 2024, பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் தொடர்பான படிவங்கள் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் கிடைக்கும்.