உணவங்காடிக் கலாசாரத்தை ஆவணப்படுத்தும் நூல்

உணவங்காடிக் கலாசாரத்தை ஆவணப்படுத்தும் நூல்

2 mins read
51719f6c-3cc1-45ad-bf1a-354548c42b69
தம்முடைய குடும்பத்தினரோடு இருக்கும் சுரேந்திரன் (நடுவில்) - படம்: அலேசியா நியோ

தம்முடைய 25வது வயதில் உணவங்காடித் தொழிலில் அடியெடுத்து வைத்தார் சுரேந்திரன். இவருக்குத் தொழில் நுணுக்கங்களைச் சொல்லித் தந்தவர் இவருடைய தாயார் திருவாட்டி முத்துலட்சுமி, 62.

32 ஆண்டுகளுக்கு முன்னர் தாயார் தொடங்கிய உணவங்காடித் தொழிலை தற்போது முன்னெடுத்துச் செல்லும் சுரேந்திரன், தமக்குப் பிறகு இத்தொழிலை வழிநடத்த யாருமில்லை என்று வருந்துகிறார்.

சிங்கப்பூரின் தனித்துவமிக்க அடையாளமான உணவங்காடித் தொழில் வரும் ஆண்டுகளில் அழிந்துவிடக்கூடும் என்று கருதும் சுரேந்திரன், அதைப் பாதுகாக்க இளம் தலைமுறையினரை அத்தொழிலுக்கு ஈர்ப்பது மிகக் கடினமாக உள்ளதாகச் சொன்னார்.

கிம் மோ உணவங்காடி நிலையத்தில் ‘ஹெவன்ஸ்’ கடையை நடத்தி வருகிறார் சுரேந்திரன், 36. அங்கு காலை உணவு வகைகளான ஆப்பம், தோசை, இடியாப்பம் ஆகியவை பிரபலம்.

“பெரும்பாலான உணவங்காடித் தொழில்களை நடத்தி வருபவர்களின் சராசரி வயது 60. அவர்களில் பலர் ஓய்வுபெறுகின்றனர். காலப்போக்கில் உணவங்காடி நிலையங்களைப் பார்ப்பது அரிதாகிவிடும்.

“என் தாயார் ஓய்வுபெறும் வயதில் உள்ளதால் நான் தற்போது தொழிலைப் பார்க்கிறேன். எங்களைப்போல பல கடைக்காரர்கள் உள்ளனர்.

“சிறிய இடத்தில் நீண்டநேரம் நின்றுகொண்டு வெப்பமான சூழலில் வேலைப் பார்க்க வேண்டும். மற்ற உணவகங்களைப்போல ஊழியர்களை எங்கள் விருப்பத்திற்குப் பணியமர்த்தி தொழில் நடத்த முடியாது. எங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் விடுப்பு எடுக்க முடியாது.

“குடும்பத்தினருடன் நாங்கள் செலவிடும் நேரம் குறைவு. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இத்தொழிலுக்கு முன்வர எந்த இளையர்களில் எவர் உள்ளனர்?” என்று வினவுகிறார் சுரேந்திரன்.

இளையர்களை உணவங்காடித் தொழிலுக்கு ஈர்க்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் சுரேந்திரன், ‘சிங்கப்பூர் உணவங்காடி நிலையங்கள்: மக்கள், இடங்கள், உணவு’ எனும் நூலின் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றுள்ளார்.

அந்நூலை எழுதியவர் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத் தலைவரான பேராசிரியர் லில்லி கோங்.

சிங்கப்பூருக்கே உரிய உணவங்காடிக் கலாசாரத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், இந்நூலின் இரண்டாம் பதிப்பை பேராசிரியர் கோங் திங்கட்கிழமை வெளியிட்டார்.

முதல் பதிப்பு 2007ல் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் உணவங்காடித் தொழில்களின் தொடக்கம் நூலின் முதல் பதிப்பில் இடம்பெற்றிருந்தது. இரண்டாம் பதிப்பில், உணவங்காடித் தொழில்கள் கண்டுள்ள பரிணாம வளர்ச்சி பற்றி எழுதப்பட்டுள்ளது.

150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் கோங், “உணவங்காடித் தொழில், சிங்கப்பூர் மரபின் பிரதிபலிப்பு. சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி இது. உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு இந்நூல் எனது சமர்ப்பணம்,” என்றார்.

உணவங்காடிக் கடைக்காரர்கள் தங்கள் தொழில்களில் செழிக்க தேசிய சுற்றுப்புற வாரியம் எடுத்துள்ள பல முயற்சிகளைப் பற்றியும் இந்நூலில் தெரிந்துகொள்ளலாம்.

டிசம்பர் 26ஆம் தேதியிலிருந்து தீவு முழுவதும் இயங்கும் அனைத்து முன்னணி புத்தகக் கடைகளிலும் அரும்பொருளகங்களிலும் $39.90க்கு நூலின் இரண்டாவது பதிப்பு விற்கப்படும்.

https://www.stbooks.sg/products/singapore-hawker-centres-people-places-food-2nd-edition எனும் எஸ்பிஎச் மீடியாவின் மின் வர்த்தகத் தளத்தில் டிசம்பர் 25க்குள் சற்று குறைந்த விலையில் $33.90க்கு நூலை வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்