சிங்கப்பூரர்களில் மிகக் குறைவானோரே ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிதியை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.
பயிற்சி வகுப்புக் கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்கும் இந்த மானியத் தொகை மூலம் இவர்கள் மேலும் பயனடைய முடியும் என்று கல்வி, மனிதவளத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறினார்.
இளம் சிங்கப்பூரர்கள் இந்த உதவி நிதியை அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக ஜனவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
30 முதல் 39 வயது நிரம்பியோரில் 40 விழுக்காட்டினர் இதைப் பயன்படுத்தியுள்ளனர். 60க்கு மேற்பட்ட வயதுடையோரில் இந்த விகிதம் 25 விழுக்காடு என்று அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டு ஏறக்குறைய 192,000 சிங்கப்பூரர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிதியைப் பயன்படுத்தினர். 2022ல் ஏதோவொரு பயிற்சிக்குச் சென்ற சிங்கப்பூரர்களின் விகிதம் 50 விழுக்காடாக உயர்ந்தது. வாழ்நாள் கல்விக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் அறிமுகமான 2015ல் அந்த விகிதம் 35 விழுக்காடாக இருந்ததை திரு கான் சுட்டினார்.
25 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் 2016 ஜனவரியில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொடக்க உதவி நிதியாக $500 வழங்கப்பட்டது.
முதிர்ச்சியடைந்த பணியிடை நிலையில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிதிக் கணக்கில் கூடுதல் தொகை நிரப்பப்படும் என்று கூறிய திரு கான், அதுகுறித்த மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.