சிங்கப்பூர் S$4.4 பில்லியன் (ரூ.27,000 கோடி) மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செய்துள்ளதாக இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்திற்கு அதிகம் அந்நிய முதலீடு செய்யும் நாடு சிங்கப்பூர். குஜராத்தில் சிங்கப்பூர் இதுவரை செய்துள்ள ஆக அதிகமான முதலீடுகளில் இதுவும் ஒன்று.
ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெற்ற ‘துடிப்புமிக்க குஜராத்’ 10வது அனைத்துலக உச்சநிலை மாநாட்டில் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய’பசுமையான, ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுதல்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் இது அறிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, நிதி, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் தீர்வுகள், போக்குவரத்து, தளவாடங்கள் என பல துறைகளைப் பிரதிநிதித்த ஒன்பது நிறுவனங்களைச் சேர்ந்த 60 வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டின் சிங்கப்பூர் கூடத்தை சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் வழிநடத்தியது.
‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ ஆதரவுடன் அமைக்கப்பட்ட இதனை, சிங்கப்பூர் தூதரக உயர் அதிகாரி சியோங் மிங் ஃபூங், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தெற்காசிய வணிகக் குழு துணைத் தலைவர் பிரசூன் முகர்ஜி ஆகியோரால் ஜனவரி 10ஆம் தேதி அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது. இந்தியாவில் அதிக பொருளியல், தொழில் வளர்ச்சி உள்ள மாநிலங்களில் ஒன்று குஜராத்.
ஒவ்வோர் ஆண்டும் 7 விழுக்காடு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை எய்தும் என கணக்கிடப்பட்டுள்ள அம்மாநிலத்தில், 2017 முதல் 2021 நிதியாண்டு வரை 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தது சிங்கப்பூர். குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்ய சிங்கப்பூரின் ஆர்வத்தை ஆராய்வதற்காக நடத்தப்பட்ட சந்திப்பில் சிங்கப்பூர் பிரதிநிதிகளுடன் குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் கலந்துகொண்டார்.
குஜராத் அரசின் அறிவார்ந்த தொழில்துறைகள், துறைமுகங்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களைப் பகிர்ந்த முதல்வர் படேல், முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“சிங்கப்பூரும் குஜராத்தும் இணைந்து புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. குஜராத்தின் பல்வேறு திட்டங்களிலும் நிறுவனங்களிலும் சிங்கப்பூர் ஆர்வத்துடன் பங்கேற்கும் நிலையில், இத்தகைய முயற்சிகளில் பங்கேற்பது பெருமையாக உள்ளது,” என திரு பிரசூன் முகர்ஜி குறிப்பிட்டார்.
சிறந்த சிங்கப்பூர் வர்த்தகங்களை குஜராத்தில் காட்சிப்படுத்தவும் வணிக ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான ஊக்கியாகவும் இந்நிகழ்வு இருந்தது,” என்றார் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோக் பிங் சூன்.
சிங்கப்பூருக்கும் குஜராத்துக்கும் இடையிலான வலுவான பொருளியல் உறவுகள் தொடர்ந்து மேம்படும் என தாம் நம்புவதோடு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் இது ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.