இணைய விளையாட்டுகள் இளையர்களுக்குக் கேளிக்கை மற்றும் படைப்பாற்றலுக்கான இடத்தை வழங்குகின்றன. ஆனால் சிலருக்கு அவை துன்புறுத்தப்படும் தளமாக மாறிவருவதாக கூறப்படுகிறது.
பதின்மூன்று வயதுக்கும் பதினெட்டு வயதுக்கும் இடைப்பட்ட இணைய விளையாட்டாளர்களில் ஐந்தில் ஒருவர், இதர விளையாட்டாளர்களால் தாம் துன்புறுத்தப்பட்டதாக உணர்கின்றனர்.
இணைய விளையாட்டுடன் தொடர்புடைய ஆய்வில் இது தெரிய வந்ததாக பிப்ரவரி 13ஆம் தேதி அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கள் பிள்ளைகள் யாருடன் விளையாடுகின்றனர் என்பது பற்றிப் பெற்றோரில் பெரும்பாலானோருக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் இணைய விளையாட்டின்போது துன்புறுத்தப்பட்டதாக உணர்ந்த கிட்டத்தட்ட பாதி இளையர்கள் அது குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்தவில்லை என்றும் தொடர்பு, தகவல் அமைச்சு கண்டறிந்தது.
இளைஞர்களிடையே பிரபலமாகி வரும் இணைய விளையாட்டுகள் குறித்தும் அதன் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளும்படி பெற்றோரை இணைய பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பெற்றோருக்கான உதவிக்குறிப்புகள்
படிக்கவும் அல்லது விளையாடவும்: பிரபலமான இணைய விளையாட்டுகள் பற்றி இணையத்தில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் இணைய தொடர்பு அம்சங்கள், அவ்விளையாட்டில் என்னென்ன பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்விளையாட்டுகளை விளையாடினால் தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் அனுபவம் குறித்து அறிந்துகொள்ள அவ்விளையாட்டுகளை ஒருமுறை விளையாடி பார்க்கலாம்.
மற்ற விளையாட்டாளர்கள் இணைப்பில் கவனம்: விளையாட்டாளர்களை மற்றவர்களுடன் இணைக்க அனுமதிக்கும் விளையாட்டுகள் மூலம் குழுப்பணி மற்றும் ஆரோக்கியமான போட்டி திறனை வளர்க்கலாம். ஆனால் அறிமுகம் இல்லாத விளையாட்டாளர்களுடன் இணைந்து விளையாடும்போது பிள்ளைகள் துன்புறுத்தலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம். அதனால், இணைய விளையாட்டின் விருப்பப் பட்டியலுக்குச் சென்று அறிமுகம் இல்லாத நபர்களுடன் தொடர்புகொள்வதற்கான தேர்வை மாற்றியமைக்கலாம்.
அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்: திடீரென்று மற்றவர்களுடன் தகவல்தொடர்பைத் துண்டிக்கும் குழந்தைகளைக் கவனியுங்கள். இளம் விளையாட்டாளர்கள் மீது அக்கறை காட்டுங்கள். பெரியவர்களுக்குச் சில பிரச்சினைகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இதுபோன்ற விவகாரங்கள் பிள்ளைகளை உணர்ச்சி ரீதியாக பாதிக்கும்.
உங்கள் பிள்ளை மற்ற பிள்ளையை கொடுமைப்படுத்துதல்: உங்கள் பிள்ளையைச் சமூகத்திற்கு விரோதமாக செயல்படத் தூண்டுவது எது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவிட்டு, இதுபோன்று நடந்துகொண்டால் அது மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்யும்போது, விளையாட்டிலிருந்து தடை செய்யும் முறையை மேற்கொள்ளலாம்.