பூன் லே பிளேசில் ஸிக்கா தொற்று குறித்து அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட கொசு, கழிவுநீர்ப் பரிசோதனையில் ஸிக்கா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பரில் அங்கு ஸிக்கா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அங்கு தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
“அமைச்சும் வாரியமும் முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினாலும், ஸிக்கா தொற்று இதோடு நின்றுவிடும் எனக் கூறிவிட முடியாது. ஏனெனில், தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோரிடம் லேசான அறிகுறிகள் தென்படலாம், அல்லது அறிகுறியே இருக்காது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஸிக்கா தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் கொண்டிருப்போரைப் பரிசோதிக்க மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக அறிக்கை கூறியது. குறிப்பாக, பூன் லே பகுதியில் வசிப்போர் அல்லது வேலை செய்வோருக்கு இது பொருந்தும்.