சென்னை: தமிழகத்தில் இதுவரை 'ஸிக்கா' கிருமியால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஸிக்கா' கிருமியால் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் கிருமித்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணியில் 21 ஆயிரம் பணியாளர்களும் 14,833 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கர்ப்பிணிப் பெண்கள் 'ஸிக்கா' பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கவனமாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கொரோனா நிலவரம்
தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 1,904 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டும் அன்றாடம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று 133,149 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்றும் இதில் 12 வயதுக்குட்பட்ட 113 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 296 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை உள்பட எட்டு மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது என்றும் 30 பேர் பலியாகிவிட்டதாகவும் அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கறுப்புப் பூஞ்சை பாதிப்பு நிலவரம்
கறுப்புப் பூஞ்சை பாதிப்புக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 863 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக அதன் தலைவரும் மருத்துவருமான தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மிக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இங்குதான் சிகிச்சை பெற்று வருவதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 342 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 395 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"ஒரு குடையின் கீழ், இவர்களுக்கான சிகிச்சைகளை ஒரே இடத்தில் அளிக்கக்கூடிய வசதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால், பல தனியார் மருத்துவமனைகள் இருந்தும் கூட இங்கு நோயாளிகள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர்," என்றார் தேரணிராஜன்.
தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகும் என்று குறிப்பிட்ட அவர், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.