மூத்தோரின் நலனிலும் குடியிருப்பு அம்சங்களிலும் கவனம்

மூத்தோரின் நலனிலும் குடியிருப்பு அம்சங்களிலும் கவனம்

2 mins read
fbe96c7a-6415-4654-bddf-cd4bf1833652
தனியார் காப்பிக் கடைகளைப் புதிதாக வாங்குவோரைக் குறைந்த விலைக்கும் உணவு வழங்கச் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பெரும் சத்தத்தால் அண்டை வீட்டாருக்கிடையே ஏற்படும் சண்டைகளைக் கையாள புதிய சட்டங்களை முன்வைப்பதற்கான திட்டங்கள், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பரவக்கூடிய கிருமிகளின் தொடர்பில் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கீடு போன்றவை செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.

மேலும், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளையும் குடியிருப்புப் பகுதிகளையும் மூத்தோருக்கு உகந்தவையாக உருமாற்றவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் எரிபொருளைப் பயன்படுத்த கட்டுமான நிறுவனங்களை ஊக்குவிக்க எடுக்கப்படும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது.

வீவக வீடுகளில் கழிவறைகளுக்குள் நுழையும்போது மூத்தோர் வழுக்கி விழாமல் இருக்க உதவும் தடுப்புகள், உள்ளே அவர்கள் பிடித்துக்கொள்வதற்கென மடக்கிவைக்கக்கூடிய கைப்பிடிக் கம்பிகள் போன்றவற்றைப் பொருத்திக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

வீவக வீடுகளில் மூத்தோருக்கென வழங்கப்படும் கூடுதல் வசதிகளில் அவை அடங்கும். மூத்தோருக்கான மேம்பாட்டுப் பணிகள் இரண்டு (என்ஹான்ஸ்மென்ட் ஃபார் ஏக்டிவ் சீனியர்ஸ் 2.0) எனும் திட்டத்தின்கீழ் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அத்தகைய வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அவற்றுக்குத் தகுதிபெற ஒரு குடும்பத்தில் ஒருவராவது 65 வயதைத் தாண்டியிருக்கவேண்டும். குறைந்தது ஓர் அன்றாட நடவடிக்கைக்கு உதவி தேவைப்படும் 60லிருந்து 64 வயதுக்கு உட்பட்டவர்கள் இருக்கும் குடும்பங்களும் தகுதிபெறும்.

அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. அதன்கீழ் கூடுதல் குடியிருப்புப் பகுதிகளில் மூத்தோருக்கான வசதிகள் வழங்கப்படும். மூத்தோரின் மனநலன், உடல்நலன் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது இலக்காகும்.

பெரும் சத்தத்தால் அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்படுவதற்கான ஆதாரத்தைச் சேகரிக்கும் உணர்க்கருவிகள் சோதிக்கப்பட்டு வருகின்றன. சோதனைகள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கின்றன.

சத்தத்தால் அண்டை வீட்டாருக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளும் குழு சோதனைகளை நடத்தி வருகிறது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் அத்தகைய புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 2019ஆம் ஆண்டில் மாதந்தோறும் சராசரியாக 400 புகார்கள் பதிவாயின. 2021லிருந்து 2023க்கு இடைப்பட்ட காலத்தில் அந்த எண்ணிக்கை 2,150க்கும் 3,200க்கும் இடையே பதிவானது.

இவற்றோடு, நகர்ப்புறப் புகார்களைக் கையாளும் முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விலங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே பரவக்கூடிய கிருமிகள் குறித்த ஆய்வுகளை நடத்த 15 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்படுகிறது.

மேலும், புதிதாகத் தனியார் காப்பிக் கடைகளை வாங்குவோர் குறைந்த விலைக்கும் உணவு வழங்கவேண்டும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. எப்பகுதிகளுக்குத் திட்டத்தை நீட்டிப்பது என்பது குறித்து ஆராயப்படும்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் கட்டுமான நிறுவனங்கள் சிஆர்எஸ் (கான்ட்ரேக்டர்ஸ் ரெஜிஸ்ட்ரே‌ஷன் சிஸ்டம்) எனும் முறையின்கீழ் பதிவுசெய்யப்படவேண்டும்.

மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் எரிபொருளைப் பயன்படுத்த கட்டுமான நிறுவனங்களை ஊக்குவிக்க இவ்வாண்டிறுதிக்குள் மானியம் ஒன்றும் தொடங்கப்படும். அதன்கீழ் அத்தகைய முயற்சிகளுக்கான செலவில் 70 விழுக்காடு வரையிலான தொகைக்குத் தகுதிபெறும் சிங்கப்பூர் நிறுவனங்கள் நிதியுதவி பெறலாம்.

அதிகபட்சமாக 30,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நாடாளுமன்றம்பட்ஜெட் 2024வரவுசெலவுத் திட்டம்