அலெக்சாண்டிரா சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள கலை, வளமான வாழ்க்கை முறைக்கு அடையாளமாக விளங்கும் முன்னாள் கில்மன் ராணுவ வீரர்கள் குடியிருப்புப் பகுதியை பொது, தனியார் வீடமைப்புப் பகுதியாக மாற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நகர மையப் பகுதியின் வீட்டுத் தேவையைப் பூர்த்திசெய்யும் விதமாக அந்தப் பகுதி பொது, தனியார் வீடமைப்புப் பகுதியாக மாறலாம். இதை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
இந்த வீடமைப்பு வளாகம் 1936ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இது பிரிட்டனின் இரண்டாம் காலாட் படைப்பிரிவினரான ‘மிடல்செக்ஸ் ரெஜிமண்ட்’ வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டது.
இந்த வளாகம் 1970லிருந்து 1980வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டபின் அது சிங்கப்பூர் ஆயுதப் படையினரால் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1990களில் இருந்து இந்தப் பகுதி வளமான வாழ்க்கை முறைப் பகுதியாக மாற்றம் கண்டது.
இந்தப் பகுதியில் தற்பொழுது கலைக் கூடங்கள், உணவு, பானக் கடைகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றின் குத்தகைக் காலம் படிப்படியாக 2030ல் முடிவடைய உள்ளன என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர் நில ஆணையம் 2020ம் ஆண்டிலிருந்து இந்தக் குடியிருப்பு வளாகத்தை நிர்வகித்து வருகிறது. இங்குள்ள நிலச் சொத்துகள் ஏப்ரல் 2023வரை குத்தகைக்கு விடப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.