பெண் ஓட்டுநர்கள், பெண் பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்ல விரும்பினால் அதைத் தெரிவிக்க உதவும் அம்சத்தை கிராப் நிறுவனம் சோதித்து வருகிறது.
பெண் ஓட்டுநர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவது நோக்கம்.
கிராப் தளத்தில் வேலைபார்க்க விரும்பும் பெண்களுக்கு, தகுதி வரம்புகளைத் தளர்த்தும் நோக்கிலான மகளிர் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அம்சங்களில் அதுவும் அடங்கும்.
மார்ச் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கிராப் நிறுவனம் அவ்வாறு குறிப்பிட்டிருந்ததாக ‘சிஎன்ஏ’ தகவல் வெளியிட்டுள்ளது.
பெண் ஓட்டுநர் ஒருவர் பெண் பயணிகளை ஏற்றிச்செல்ல விருப்பம் தெரிவித்தால், அருகில் காத்திருக்கும் பெண் பயணியுடன் அவரது சேவையை இணைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கிராப் கூறியது.
கிராப் ஓட்டுநர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதைக் குறிப்பிட்ட நிறுவனம், அதன் தளத்தில் இணையும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியது.
மகளிர் திட்டம்
மார்ச் 6ஆம் தேதி நடைபெற்ற பெண்கள் பங்காளித்துவத்தை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியில் மேலும் சில திட்டங்கள் அறிமுகம் கண்டன.
பெண்களுக்கு மட்டுமான இணையவழித் தகவல் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது அவற்றில் ஒன்று. பெண் ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, ஆதரவு தருவதற்கு இது உதவும். மாதம் ஒருமுறை நேரடி நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
சவாலான சூழல்களைச் சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சி ஒன்று இம்மாதம் தொடங்கப்படும்.
புதிய பெண் ஓட்டுநர்களை அனுபவமிக்கவர்களுடன் இணைக்கும் துணை ஓட்டுநர் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பெண் ஓட்டுநர்கள், விநியோகிப்பாளர்களுக்கு சுகாதாரப் பரிசோதனை உட்பட அவர்கள் கூடுதல் பலனடைய உதவும் திட்டங்களில் கவனம் செலுத்தவிருப்பதாக கிராப் கூறியது.
சிஎன்ஏவின் கேள்விக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அளித்த பதிலில் பெரும்பாலான புதிய திட்டங்கள் இம்மாதமே நடப்புக்கு வரும் என்று கிராப் தெரிவித்தது.