சிங்கப்பூர் முழுவதும் 32 எம்ஆர்டி நிலையங்களில் உள்ள பழைய 290 மின்படிக்கட்டுகள் மேம்படுத்தப்பட உள்ளன.
வடக்கு - கிழக்கு, வடக்கு - தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு ரயில் தடங்களில் உள்ள மின்படிக்கட்டுகள் அவை.
பயணிகளுக்கு அதிக வசதியை ஏற்படுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டு முதல் மின்படிக்கட்டுகள் புதுப்பிக்கப்படும்.
ஆறாண்டுகளில், அதாவது 2032ஆம் ஆண்டில் மின்படிக்கட்டுப் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 7) அழைப்பு விடுத்தது.
புதுப்பிக்கப்பட்ட பின்னர் மேம்பட்ட அம்சங்களை மின்படிக்கட்டுகள் கொண்டிருக்கும். உச்சநேரத்திலும் சாதாரண நேரத்திலும் மின்படிக்கட்டுகள் வெவ்வேறு வேகத்தில் இயங்கக்கூடியதும் புதிய அம்சங்களுள் ஒன்று.
வடக்கு - தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு தடங்களில் ரயில் போக்குவரத்தை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் இதற்கு முன்னர் தனது 42 எம்ஆர்டி நிலையங்களில் இருந்த 231 மின்படிக்கட்டுகளைப் புதுப்பித்தது.
2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் நீடித்த அந்த புதுப்பிப்புப் பணிகளுக்கு $47.3 மில்லியன் செலவானது.
1987ஆம் ஆண்டு சிங்கப்பூரில் எம்ஆர்டி எனப்படும் பெருவிரைவு ரயில் போக்குவரத்துத் தொடங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் புதுப்பிப்புப் பணி அது. ஓட்டிஸ் நிறுவனம் அந்தப் பணிகளை நிறைவேற்றிய குத்தகையாளர்.
அந்த 231 மின்படிக்கட்டுகளைக் கொண்ட வடக்கு - தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு ரயில் தடங்கள் சிங்கப்பூரின் ஆகப் பழையவை.
மேலும், அந்த மின்படிக்கட்டுகள் 1987ஆம் ஆண்டுக்கும் 1990ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்டவை.
தற்போது அந்த இரு ரயில் தடங்களையும் சேர்ந்த 16 எம்ஆர்டி நிலையங்களின் மின்படிக்கட்டுகள் புதுப்பிக்கப்பட உள்ளன.
தோ பாயோ, உட்லண்ட்ஸ் மற்றும் டோவர் எம்ஆர்டி நிலையங்கள் அதில் அடங்கும்.