ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவதாகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
ஊழியர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது தொடர்பான வரையறுக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் நிறுவனங்கள் சிறந்த பங்காற்றுகின்றன என்றார் அவர்.
சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்த உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மார்ச் 7ஆம் தேதி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சும் பிசினஸ் டைம்சும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
புதிய திறன்களைப் பெறுவது, ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை, வேலை ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள உதவும் என்று அந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்கள் அத்தகைய திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்ற முடியும். இருப்பினும் அவை ஊழியர்களுக்கு மேற்கல்வி, பயிற்சி ஆகிய வாய்ப்புகளை வழங்குவது குறித்துச் சிந்திப்பதை ஊக்குவிக்க, கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் மேற்கல்விக்காக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின்கீழ் கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திறன்மேம்பாட்டுக்கு இத்தகைய ஊக்குவிப்புகள் இருந்தபோதும் சிங்கப்பூரர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தைக் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.
2015ல் அறிமுகம் கண்ட அத்திட்டத்தை இதுவரை சிங்கப்பூரர்கள் மூவரில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
நிதியுதவிக்கு அப்பால், மேற்கல்விக்கு நேரம் ஒதுக்க இயலாமை போன்ற சில அம்சங்களும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் முதலாளிகள் அந்த வகையில் உதவாமலிருப்பதும் காரணமாக இருக்கக்கூடும் என்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் டான் கூறினார்.
மனிதவளச் சிக்கல்களை எதிர்நோக்குதல், பயிற்சி பெற்ற திறனாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுதல் போன்றவை குறித்த கவலை நிறுவனங்களுக்கு இருக்கலாம் என்றும் உரையாடலில் குறிப்பிடப்பட்டது.
நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களில் முதலீடு செய்வது முக்கியம் என்று கூறிய அமைச்சர் இந்திராணி, அத்தைகைய சில பயிற்சி வகுப்புகளை நிறுவனத்திற்குள்ளேயே நடத்த முடியும் என்பதைச் சுட்டினார்.