அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை சற்றே அதிகரித்திருப்பதும் சிங்கப்பூரில் அரசாங்கமே ஆக நம்பகமான அமைப்பாக விளங்குவதும் வருடாந்தர ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளன.
‘2024 எடில்மன் டிரஸ்ட் பரோமீட்டர்’ எனும் அந்த ஆய்வின் முடிவுகள் மார்ச் 12ஆம் தேதி வெளியிடப்பட்டன.
2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, அரசாங்கம் (77%), அரசு சாரா அமைப்புகள் (66%), வர்த்தகம் (63%), ஊடகம் (60%) ஆகியவற்றின் மீதான நம்பிக்கை தலா ஒரு விழுக்காட்டுப் புள்ளி அதிகரித்துள்ளது.
இதற்கு மாறாக, உலக அளவில் வர்த்தகம் மட்டுமே நம்பகமான அமைப்பு என்று கருத்துரைக்கப்பட்டுள்ளது.
அரசு சாரா அமைப்புகள், அரசாங்கம், ஊடகம் ஆகியவை குறித்துப் பங்கேற்பாளர்கள் நடுநிலையாகக் கருத்துரைத்துள்ளனர்.
ஐம்பது விழுக்காட்டுக் குறைவான ஆதரவு அவநம்பிக்கையைக் குறிக்கும். 60 அல்லது அதற்கு மேற்பட்ட விழுக்காடு நம்பிக்கையைக் குறிக்கும்.
சிங்கப்பூரில் நம்பிக்கை அதிகரித்தபோதும் ஆய்வில் பங்குகொண்ட 93 விழுக்காட்டினர் வேலை இழப்பு குறித்துக் கவலை தெரிவித்தனர். இது மூன்று விழுக்காட்டுப் புள்ளி அதிகமாகும்.
கணினி ஊடுருவிகள் குறித்த கவலை ஏழு விழுக்காட்டுப் புள்ளி அதிகரித்து 80 விழுக்காடு ஆனது. பருவநிலை மாற்றம் குறித்த கவலை ஐந்து விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. அண்மை ஆய்வு, அதிவேக உருமாற்றம் நிலவும் வேளையில் புத்தாக்கத்தின் மீதான சமூகத்தின் நம்பிக்கையில் கவனம் செலுத்தியது.
சிங்கப்பூர் பங்கேற்பாளர்களில் 28 விழுக்காட்டினர் புத்தாக்கம் சரிவரக் கையாளப்படவில்லை என்று கருத்துரைத்துள்ளனர்.
புத்தாக்கம் சரியாகக் கையாளப்படுவதாகக் கருத்துரைத்தோரைவிட இது நான்கு விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம்.
புத்தாக்கம் சரிவரக் கையாளப்படவில்லை என்று கூறியோரில் வெவ்வேறு வருவாய்ப் பிரிவினர், பாலினத்தவர், வயதுப் பிரிவினரும் அடங்குவர்.
அவர்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டதாகக் கருதுகின்றனர்.
உலகின் பிற நாடுகளிலும் ஆய்வில் பங்கேற்றோரில் பெரும்பாலோர் புத்தாக்கம் சரிவரக் கையாளப்படவில்லை என்றே கருத்துரைத்தனர்.
உலகெங்கும், தொழில்நுட்பம் விரைந்து மாற்றம் காண்பதாக 73 விழுக்காட்டினர் கூறினர்.
அரசாங்கம் ஆக நம்பகமான அமைப்பாகக் கருதப்படுவதால், இந்தப் போக்கை மாற்றும் வல்லமை அதற்கு உண்டு. புத்தாக்கங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, மக்களிடம் அவை குறித்த புரிதலை உருவாக்கி, நன்மையளிப்பனவாகவும் அனைவராலும் அணுகக்கூடியனவாகவும் அவற்றை வைத்திருப்பதால் அது சாத்தியமாகும்.
புத்தாக்கங்களின் மீது நம்பிக்கை கொள்வதற்கு, அரசாங்கம், வர்த்தகம், அரசு சாரா அமைப்புகள், ஊடகம் என நான்கு அமைப்புகளும் முக்கிய விழுமியங்களைப் பாதுகாப்பதும் புதிய தொழில்நுட்பங்களின் சாதக, பாதகங்கள் குறித்து வெளிப்படையாக இருப்பதும் அவசியம் என்று சிங்கப்பூரிலிருந்து கருத்தாய்வில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 3 முதல் 22ஆம் தேதி வரை, உலகின் 28 சந்தைகளில் கிட்டத்தட்ட 32,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.