குடிபோதையில் சிமென்ட் லாரி ஓட்டி, அவ்வழியாக மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோதி அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த இந்திய நாட்டவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனைத்து வகை வாகனங்களை ஓட்ட 12 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டன.
இந்த விபத்து 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதியன்று மரினா ஈஸ்ட் டிரைவில் இரவு 7.13 மணி அளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் பங்ளாதேஷியரான 40 வயது சாஹா ராஜன் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
தாம் சரியான சாலைத் தடத்தில் சிமென்ட் லாரியை ஓட்டியதாகவும் மிதிவண்டியை ஓட்டியவர் லாரிக்கு மிக அருகில் வந்ததாகவும் 42 வயது சுப்புராஜ் செல்வகுமார் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.
அவரிடமிருந்து மதுபான வாடை வீசியது. அவரது கண்கள் சிவந்திருந்தன. நிதானமற்ற முறையில் அவர் நடந்ததை அதிகாரிகள் கவனித்தனர்.
பீர் அருந்தியிருந்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் கூறினார்.
சுப்புராஜ் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்திருந்தது சோதனையில் தெரியவந்தது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாகவும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
சுப்புராஜ் ஓட்டிய லாரி சீரான முறையில் செல்லாமல் சாலையில் அங்கும் இங்கும் சென்றதை அதில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின.
சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு மிதிவண்டிகளை நோக்கி லாரி சென்றதாகவும் அவற்றில் ஒன்றின்மீது அது மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு லாரி சாலைத் தடுப்பு மீது ஏறி மரம் ஒன்றின் மீது மோதியது.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதியன்று வேக வரம்பையும் மீறி சுப்புராஜ் வாகனத்தைச் செலுத்தியதாகவும் அதற்காக அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.