அபாயகரமான முறையில் காரை ஓட்டி, காவல்துறை காரை இடித்த ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கவனமின்றி கார் ஓட்டியதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கிளமெண்ட் சியா டியான் ஸியாங் எனும் அந்த 44 வயது ஆடவர், ஏப்ரல் 4ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவுக்குப்பின் பெங்கூலன் ஸ்திரீட்டை நோக்கிச் செல்லும் ஜாலான் புசார் ரோட்டில் அவர் அவ்வாறு காரை ஓட்டினார்.
சாலையின் முதல் தடத்திலிருந்து வேகமாக நான்காவது தடத்திற்குக் காரை ஓட்டிய சியா, பின்னால் காவல்துறை கார் வந்ததைக் கவனிக்கவில்லை.
சியாவின் கார், காவல்துறை காரை மோதியது. அதன் விளைவாக காவல்துறை கார் கடைவீட்டில் மோதியதை சியாவின் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராப் பதிவுகள் காட்டின.
சம்பவத்தில் காவல்துறை காரை ஓட்டிய 25 வயது அதிகாரி காயமடைந்தார்.
சாலைத் தடத்திற்குள் ஓட்டத் தவறியது, தடம் மாறக்கூடாது என்று குறிக்கப்பட்டுள்ள பகுதியில் தடம் மாறியது ஆகியவை தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளும் தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
மூன்று ஆண்டுகளுக்கு சியா எந்த விதமான வாகனத்தையும் ஓட்ட இயலாது. மேலும், கடை வீட்டின் உரிமையாளருக்கு $1,962.40 இழப்பீடு செலுத்தும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.