2020 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு, எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் தொகுதிகளில் குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளை மக்கள் செயல் கட்சியைச் (மசெக) சேர்ந்த அடித்தளத் தலைவர்கள் அதிகரித்துள்ளனர்.
ஹவ்காங் அவென்யூ 5ல் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் மாதத்தின் முதல், மூன்றாம் புதன்கிழமைகளில் குடியிருப்பாளர்களுடன் “வழக்கமான அளவளாவும் அமர்வுகளை” தாம் தொடங்கியிருப்பதாக ஹவ்காங்கிற்கான மசெக அடித்தள ஆலோசகர் ஜேக்சன் லாம் வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் திரு லீ ஹோங் சுவாங்கிடமிருந்து மசெக ஹவ்காங் கிளைத் தலைவர் பொறுப்பை திரு லாம் ஏற்றார். 2015, 2020 பொதுத் தேர்தல்களில் பாட்டாளிக் கட்சியின் கோட்டையான ஹவ்காங்கில் திரு லீ போட்டியிட்டார்.
மசெக அடித்தளத் தலைவர்கள் அல்ஜுனிட் குழுத்தொகுதியிலும் இதேபோன்று குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசும் நிகழ்வுகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இத்தகைய சந்திப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
காக்கி புக்கிட்டில் குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் நடவடிக்கைக்கு தாம் திரும்பிவிட்டதாக அடித்தள ஆலோசகர் ஷம்சுல் கமார் மார்ச் 28ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
சக அல்ஜுனிட் அடித்தள ஆலோசகரான விக்டர் லாயும் பிடோக் ரெசர்வோர் மற்றும் ஹவ்காங்கில் “வாரந்தோறும் காப்பிக்கடை அமர்வுகளில்” குடியிருப்பாளர்களைச் சந்தித்து வருகிறார்.
திரு ஷம்சுலும் திரு லாயும் 2015, 2020 பொதுத் தேர்தல்களில் மசெக வேட்பாளர்களாக அல்ஜுனிட்டில் போட்டியிட்டனர்.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மசெக, “சிங்கப்பூர் முழுவதும் குடியிருப்பாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த எமது மசெக கிளைத் தலைவர்கள் பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்,” என்றது.
அல்ஜுனிட், ஹவ்காங் தனித்தொகுதிகளுடன் செங்காங் குழுத்தொகுதியும் பாட்டாளிக் கட்சியின் வசம் உள்ளன. 2020 தேர்தலில் 52.12 விழுக்காட்டு வாக்குகளுடன் அத்தொகுதியை அக்கட்சி கைப்பற்றியது.