பெய்ஜிங்: சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சீனாவின் துணை அதிபர் ஹான் ஸெங்கைச் சந்தித்துப் பேசி உள்ளார். அந்தச் சந்திப்பு பெய்ஜிங் நகரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) நிகழ்ந்தது.
சிங்கப்பூர்-சீனா இடையில் இருதரப்பு உறவுக்கான வழிவகைகளை ஆராய்வதற்காக திரு ஹெங் ஆறு நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார். அந்த வருகையின் ஒரு பகுதியாக துணை அதிபருடனான சந்திப்பு நடைபெற்றது.
ஜேசிபிசி எனப்படும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான இணை மன்றத்தின் தலைமைப் பொறுப்பை இணைந்து ஏற்கும் நிலையில், தங்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவு சிறந்த முறையில் இருப்பதாக அந்தச் சந்திப்பின்போது திரு ஹெங் கூறினார்.
“நாம் இப்போது நல்ல நண்பர்கள் என்பதோடு பழைய நண்பர்களும்கூட,” என்று திரு ஹானிடம் திரு ஹெங் தெரிவித்தார்.
சிங்கப்பூர்-சீனா இடையிலான உயர்மட்டச் சந்திப்பு அது. அந்த வருடாந்திரச் சந்திப்பின் நான்காவது கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டனர்.
இதுபோன்றக் கூட்டங்களுக்கு முதல்நிலை துணைப் பிரதமர்கள் தலைமை ஏற்பது வழக்கம்.
2019-2022 இடையிலான சந்திப்பின்போது பத்துக்கும் மேற்பட்ட உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன், இளையர் பரிமாற்றத் திட்டங்கள், இயற்கைவளப் பாதுகாப்பு, மின்னிலக்க நாணயம் போன்றவற்றில் ஆழமான ஒத்துழைப்புக்கும் வழிவகை காணப்பட்டது.
சூசோ தொழிலியல் பூங்காவை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜேசிபிசி 2004ஆம் ஆண்டு தொடங்கியது. சிங்கப்பூரின் நிறுவனப் பிரதமர் லீ குவான் இயூ அதில் தனிப்பட்ட ஈடுபாடு கொண்டிருந்தார்.
இரு அரசாங்கங்களும் இணைந்து உருவாக்கிய உயிர்நாடியான மூன்று திட்டங்களில் முதல் திட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசிய திரு ஹெங், “சூசோதொழிலியல் பூங்காவில் நாம் கணிசமான முன்னேற்றத்தைச் சாதித்துள்ளோம்,” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கிய திரு ஹெங்கின் சீனப் பயணத்தில் ஷென்ஸென்னும் ஹாங்காங்கும் இடம்பெற்று உள்ளன.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு திரு ஹெங் மேற்கொண்டிருக்கும் முதலாவது சீனப் பயணம் அது.
மேலும், 2023 ஏப்ரலில் இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்திய பின்னர் நடைபெற்று இருக்கும் ஆக அண்மைய உயர்மட்ட அதிகாரத்துவப் பரிமாற்றமாகவும் அவரது பயணம் அமைந்துள்ளது.