செங்காங்கில் வேன் வாகனம் ஒன்றை நசுக்கிய பாரந்தூக்கி அகற்றப்பட்டுள்ளது.
பாரந்தூக்கி விழுந்து விபத்துக்குள்ளான இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 9) பொங்கோல் ரோட்டில் நிகழ்ந்தது. அதற்கு மறுநாளான புதன்கிழமை (ஏப்ரல் 10) அந்தச் சாலையில் மீண்டும் போக்குவரத்து இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அருகே வசிக்கும் தகவல் தொழில்நுட்பப் பொறியாளரான 47 வயது ஆனந்த் பிரதன், செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ஒரு மணிக்கு விழுந்த பாரந்தூக்கி சாலையில் இருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் மறுநாள் காலை ஒன்பது மணியளவில் அங்கு சென்றபோது பாரந்தூக்கி காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“விபத்து காரணமாக எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால் சாலையை சீர்படுத்திக்கொண்டிருந்ததாக ஊழியர்கள் கூறினர்,” என்று திரு ஆனந்த் பிரதன் சொன்னார்.
பிற்பகல் 12.15 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்றது. அப்போது அந்த நான்கு தடச் சாலையில் பணிகள் நடந்துகொண்டிருந்தன.
புதன்கிழமை நண்பகல் வேளையில் அப்பகுதிவழி தனது வாகனத்தை ஓட்டிச் சென்றபோது அங்கு போக்குவரத்து இருந்ததாக மற்றொரு செங்காங் குடியிருப்பாளரான 55 வயது வின்ஸ் ஹுவாங் எனும் தொழிலதிபர் கூறினார்.
பாரந்தூக்கி விழுந்து வேனை நசுக்குவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு அதன் ஓட்டுநர் வெளியே குதித்துத் தப்பியதை சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறினர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னதாகத் தெரிவித்தது.