மாற்று அறுவை சிகிச்சை, ரத்த மாற்ற சிகிச்சை ஆகியவற்றை செய்துகொண்டதால் அரிய வகை நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தெமாசெக் உயர்நிலைப்பள்ளி மாணவியான 14 வயது ஃபிலிஷா ஸாஃபிலினால் ஏப்ரல் 10ஆம் தேதியன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாட முடிந்தது.
நூல்கள் வாசிப்பது, எழுதுவது என்றால் ஃபலிஷாவுக்கும் மிகவும் பிடிக்கும். தமது பள்ளியின் நாடகக் குழுவான ‘சீரியஸ் பிளே’யின் உறுப்பினராக அவர் இருக்கிறார்.
இருப்பினும், தமது உடல்நிலை காரணமாக அவரால் பள்ளி நடவடிக்கைகளில் எப்போதும் துடிப்புடன் செயல்பட முடியவில்லை.
ஃபலிஷா 6 வயதாக இருந்தபோது அவருக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்தது.
ஃபலிஷா கிட்டத்தட்ட ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோது அவரது மலத்தில் ரத்தம் இருந்ததை அவரது தாயாரான 45 வயது திருவாட்டி சித்தி சுபாய்டா முகம்மது ஷரிஃப் கண்டார். ஃபலிஷாவை அவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஃபலிஷாவுக்குக் குடல் அழற்சி நோய் இருப்பது தெரியவந்தது.
இந்த நோய் தொடர்பாக ஃபலிஷாவுக்குத் தரப்பட்ட மருந்து எவ்வித பலனையும் தராததை அடுத்து, கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அவருக்குக் கல்லீரல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு அரிய வகை கல்லீரல் நோய் இருப்பது உறுதியானது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையிலும் அவருக்கு கல்லீரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
அவரது நோய் மோசமடைந்திருந்தது அதில் தெரியவந்தது.
குடல் அழற்சி நோய், அரிய வகை கல்லீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஃபலிஷா பல சிரமங்களை எதிர்கொண்டார்.
பள்ளிக்குச் செல்வது அவருக்குச் சவால்மிக்கதாக இருந்தது.
“எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது. எனது முடி உதிர்ந்தது. பல நாள்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று எனது நண்பர்கள் கேள்வி எழுப்பினர்,” என்று ஃபலிஷா பகிர்ந்துகொண்டார்.
2021ஆம் ஆண்டில் ஃபலிஷா தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது அவருக்கு மீண்டும் கல்லீரல் பரிசோதனை நடத்தப்பட்டது. இன்னும் ஓர் ஆண்டுக்கு மட்டுமே அவரது கல்லீரல் செயல்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமது கல்லீரலைத் தானம் செய்ய ஒருவர் முன்வந்தார்.
அவரது கல்லீரல் ஃபலிஷாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது.
அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஃபலிஷாவுக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது குறித்து ஃபலிஷாவின் மருத்துவர் டாக்டர் எஸ். வெங்கடேஷ் கார்த்திக் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஃபலிஷாவுக்கு ரத்த மாற்ற சிகிச்சைகள் தேவைப்பட்டன. அவற்றை அவர் செய்துகொண்டார்.
தமக்கு கல்லீரலைத் தானம் செய்தவருக்கு ஃபலிஷா நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் ரத்த தானம் மிகவும் முக்கியம் என்பதை உணர்வதாக அவர் கூறினார்.
உடல் உறுப்பு தானம், ரத்த தானம் ஆகியவை ஃபலிஷாவின் உயிரைக் காப்பாற்றி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க பேரளவில் உதவியுள்ளன.