சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நிதிக் கொள்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் மூலாதாரப் பணவீக்கம் இவ்வாண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
“ஆனால் நான்காம் காலாண்டுக்குள் அது அநோகமாகப் படிப்படியாகக் குறையும்; அடுத்த ஆண்டு தொடர்ந்து குறையும்,” என்று வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) தனது நிதிக் கொள்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டது.
2021ஆம் அண்டு அக்டோபர் மாதத்துக்கும் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நிதிக் கொள்கையை ஐந்து முறை முடுக்கிவிட்டது. அதற்குப் பிறகு நிதிக் கொள்கையில் மாற்றம் இடம்பெறவில்லை.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மூலாதாரப் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகரித்தது. சேவை, உணவு ஆகிய துறைகளில் இடம்பெற்ற பணவீக்கத்தால் இந்நிலை உருவானது.
சீனப் புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற செலவுகள் அதற்கான காரணங்களில் ஒன்று.
ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதத்துக்கான மூலாதாரப் பணவீக்க விகிதம் 3.6 விழுக்காடாகப் பதிவானது. ஜனவரி மாதத்துக்கான விகிதம் 3.1 விழுக்காடாகும்.
பிப்ரவரி மாதத்துக்கான விகிதம், 2023ஆம் அண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு காணப்படாத அளவில் அதிகமாகப் பதிவானது.
மூலாதாரப் பணவீக்க விகிதத்தை இரண்டு விழுக்காட்டில் வைத்திருப்பது சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இலக்கு. ஆனால் விகிதம் தொடர்ந்து அதைவிட அதிகமாகப் பதிவாகி வந்துள்ளது.
அதனையடுத்து சிங்கப்பூர் நாணய ஆணையம் பொதுவாகத் தனது கொள்கைகளில் அதிக மாற்றம் செய்யாது என்று புளூம்பர்க் செய்தி நிறுவனத்தின் கருத்தாய்வில் பங்கேற்ற 20 பொருளியல் வல்லுநர்களும் கணித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.