தைப்பே: அண்மையில் தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதில் ஹுவாலியென் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தில் மாயமான சிங்கப்பூர் தம்பதியரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதியன்று தொடர்ச்சியாக பல நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இதையடுத்து, திரு சிம் ஹுவீ கோக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோரைத் தேடும் பணி ஏப்ரல் 14ஆம் தேதியன்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஹுவாலியென் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இருக்கும் ஷகாடாங் பள்ளத்தாக்குப் பாதையை திரு சிம்மும் திருவாட்டி நியோவும் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தைவானிய நேரப்படி காலை 7.20 மணி அளவில் அவர்கள் இருவரும் அப்பகுதியில் பேருந்தைவிட்டு இறங்கியதைக் காட்டும் காணொளிப் பதிவுகளை தைவானிய அதிகாரிகள் வெளியிட்டன.
இந்நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதியன்று தேடுதல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஷகாடாங் மலைப்பகுதியிலிருந்து பாறைகள் விழுந்ததாக தைவானிய ஊடகம் தெரிவித்தது.
தைவானிய நேரப்படி காலை 10.30 மணி அளவில் அந்த மலைப்பகுதிக்கு அருகில் உள்ள பெரிய கற்சுவர் இடிந்து விழுந்தது.
அதிலிருந்து உடைந்து விழுந்த பாறைகள் தங்கள் மீது விழாதிருக்க மீட்புப் பணியாளர்கள் அருகில் இருந்த ஓடையில் குதித்துத் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.